கெளதமியுடன் காஸ்ட்யூம் பஞ்சாயத்து! : முற்றுப்புள்ளி வைத்தார் ஸ்ருதிஹாசன்

கமல் இயக்கி நடித்து வரும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் அவரது மகள் ஸ்ருதிஹாசன் முக்கிய வேடத்திலும், கெளதமி அதே படத்தில் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கும், கெளதமிக்கும் இடையே இந்த படத்தின் காஸ்ட்யூம் லுக்குகள் குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், கெளதமி காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றுவது ஸ்ருதிஹாசனுக்கு பிடிக்கவில்லை என்றும் செய்திகள் பரவியது.
இந்த பஞ்சாயத்தால் கமல்ஹாசன் – கெளதமி இடையிலான உறவுக்கே பங்கம் வந்து விடும் என்கிற ரேஞ்சில் செய்திகள் வெளியானது.
இப்படி பிரச்சனையின் தீவிரத்தன்மை உணர்ந்ததால் அதிர்ந்து போன ஸ்ருதிஹாசன் தரப்பு அவர் சார்பில் விளக்கம் ஒன்றை ஊடகங்களுக்கு அனுப்பியிருக்கிறது.
அதில் கூறியிருப்பதாவது :
“தனக்கென்று ஒரு தனி ஸ்டைல்…தனக்கென்று ஒரு தனி டிசைன் என தனித்துவமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஸ்ருதி ஹாசன், தன்னுடைய திரைப்படங்களிலும் அதையே தான் விரும்புகிறார். ஒவ்வொரு படங்களிலும், தன்னுடைய ஆடை அலங்காரம் மீதும், தன்னுடைய தோற்றத்தின் மீதும் அதிக அக்கறை கொண்ட ஸ்ருதி, அதனை பற்றி தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் கலந்து பேசுவது வழக்கம்.
தன்னுடைய தந்தையின் ‘சபாஷ் நாயுடு” படத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளரும் மாடர்ன் பெண்ணாகவும், துடுக்கான பெண்ணாகவும் நடிக்கிறார் ஸ்ருதி. இதனை நன்கு கருத்தில் கொண்டு, அந்த கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப சில ஆடைகளை வடிவமைத்து கொடுத்து இருக்கிறார் கௌதமி. ஒரு ஆடை வடிவமைக்கப்பட்டதும் அதை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரிடம் காண்பித்து கருத்துகள் கேட்பது வழக்கமான ஒன்று தான்.
அந்த வகையில் கௌதமி வடிவமைத்த ஆடைக்கு சில யோசனைகளை அவர்கள் கூற, அதற்கு ஏற்றார் போல், கதாப்பாத்திரத்திதோடு கனகச்சிதமாக பொருந்தும் ஆடையை கௌதமி வடிவமைத்து கொடுத்து இருக்கிறார். ஸ்ருதியும் தன் பங்குக்கு தன்னுடைய உடை அலங்காரம் படத்தின் கதைக்கு ஏற்பவும் , பாத்திர படைப்புக்கும் ஏற்ற மாதிரி இருக்க வேண்டும் என்று கௌதமியுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வாழக்கூடிய ஒரு மாடர்ன் பெண் எப்படி இருப்பாரோ, அதேபோல் ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் இருப்பார்’.
சினிமாவை தவிர்த்து நிஜ வாழ்க்கையிலும் ஸ்ருதி – கௌதமி இருவர்கள் இடையே நிலையான அன்பு இருந்து வருகிறது. “ஸ்ருதி மற்றும் கௌதமி இருவருக்கும் நடுவே எப்போதும் ஒரு பரஸ்பரமான அன்பு இருந்து வருகிறது. ஸ்ருதியும் சரி, அவருடைய தந்தையும் சரி.. இருவருமே மிகவும் அழகான உறவை தான் தங்களுக்குள் பகிர்ந்து வருகின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஸ்ருதியின் பிறந்த நாள் விழாவில் கௌதமி பங்கேற்று தன்னுடைய அன்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது…” என்று கூறியுள்ளார்.
இந்த விளக்கம் ஸ்ருதி-கெளதமிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று அவர் தரப்பு நம்புகிறது.