”பெற்றோர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்!” : டைவர்ஸை உறுதி செய்தார் இயக்குநர் விஜய்!

‘தெய்வத் திருமகன்’ படத்தில் நடித்த போது தான் அந்தப்படத்தை இயக்கிய விஜய்யுடன் காதல் வயப்பட்டார் நடிகை அமலாபால்.
தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே காதலில் விழுந்த விஷயம் மீடியாக்கள் மூலமாக வெளியே தெரிய ஆரம்பித்தது.
இதனால் தொடர்ந்து காதல் ரகசியத்தை பாதுகாக்க முடியாமல் அதை ஒப்புக் கொண்டார்.
இரு வீட்டாரின் சம்மதத்துடன் சென்ற 2014-ஆம் ஆண்டு இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் கேரளாவிலும், சென்னையிலும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் நடந்தேறியது.
திருமணமாகி இரண்டு வருடங்கள் கூட முடியாத நிலையில் இயக்குநர் விஜய் மற்றும் அமலாபாலுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாகவும், அதன் முடிவாக இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும் சென்ற வாரம் பரபரப்பான செய்தி வெளியானது.
இந்த விவாகரத்து பின்னணியில் அமலாபால் திருமணத்துக்குப் பிறகு படங்களில் தொடர்ந்து நடிப்பது தான் பிரச்சனை என்று தெரிய வந்திருக்கிறது.
பொதுவாக திருமணத்துக்குப் பிறகு நடிகைகள் படங்களில் நடிப்பதை மணமகன் வீட்டார் விரும்புவதில்லை. அப்படித்தான் அமலாபால் படங்களில் நடிப்பதை விஜய் வீட்டார் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் அவர்களின் பேச்சை மீறி அமலாபால் படங்களில் நடித்து வருவதாகவும், தனுஷ் நடிப்பில் தயாராகும் வட சென்னை படத்தின் மூன்று பாகங்களுக்கும் தொடர்ச்சியாக நடிக்க ஒப்புக் கொண்டதாலும் தான் இந்த கருத்து வேறுபாடுக்கு முக்கிய காரணமாம்.
இந்த செய்தி குறித்து கருத்து தெரிவித்திருக்கும் இயக்குநர் விஜய் “இது பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. என் பெற்றோர் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்” என்று கூறியிருக்கிறார்.