ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தப்படம் பலகட்ட தடைகளைத் தாண்டி 2015 இயர் எண்ட் செலிபிரேஷன் படமாக ரிலீசாகியிருக்கிறது.
படத்தின் பட்ஜெட் 24 கோடி ரூபாய் வரை என்கிறார்கள்.
பெரிய பெரிய பட்ஜெட்டுகளில் படங்களைத் தயாரித்து நொடிந்து போயிருக்கும் தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரனுக்கு நிஜமான வெற்றியைக் கொடுத்து இனிமேலாவது விரலுக்கேத்த வீக்கத்தில் படங்களைத் தயாரித்து காசு பார்க்க முயற்சி செய்யுங்கள் என்பதை உணர்த்துவதற்காக வந்த படம் போல…
திட்டமிடப்பட்ட தேதியில் ரிலீசாகாமல் தாமதமான ரிலீஸ் என்றாலும் படத்தின் கதை, திரைக்கதையின் நேர்த்தி, நிஜங்களைப் பேசும் கூர்மையான வசனங்கள் ஆகியவை இந்தப் படத்தை நிச்சயமாக்கும் ஒரு வெற்றிப்படமாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் கல்யாணகிருஷ்ணனின் இயக்கத்தில் வந்திருக்கும் முதல்படம். கண்டிப்பாக குருவுக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளருக்கும் பெருமையோடு பணத்தையும் சேர்த்து வசூல் செய்து கொடுப்பார் என்பது உண்மை.
பொதுவாக தமிழ்சினிமாவில் கிரிக்கெட்டைத் தவிர மற்ற விளையாட்டுகளை கதைக்களமாகக் கொண்டு ரிலீசாகும் படங்கள் ரசிகர்களால் அவ்வளவு தூரத்துக்கு கொண்டாடப்படுவதில்லை. ஆனால் இந்த பூலோகத்தில் பாக்ஸிங் என்கிற குத்துச்சண்டை விளையாட்டை வட சென்னையை பின்னணியாக வைத்து படமாக்கியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.
வட சென்னையில் ராசமாணிக்கம் பரம்பரை மற்றும் நாட்டு மருந்து பரம்பரை இரண்டு பரம்பரைகளுக்கும் இடையே குத்து சண்டையில் யார் பெரியவன் என்கிற மோதல் பரம்பரை பரம்பரையாக வெடிக்கிறது.
இதில் ஹீரோவான ஜெயம்ரவியின் அப்பா குத்து சண்டையில் தோற்றுப்போன அவமானத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து விட, அப்பாவின் மரணத்துக்கு பழி வாங்க எதிர் பரம்பரையின் மகனை அதே குத்துசண்டை மூலம் பழி வாங்க நினைக்கிறார்.
இந்த இரண்டு பரம்பரைகளின் தீராப்பகையை தனியார் ஸ்போர்ட்ஸ் சேனலின் உரிமையாளரான பிரகாஷ்ராஜ் காசாக்க முயற்சிக்க, அதை எப்படி ஜெயம்ரவி முறியடிக்கிறார் என்பதே கதை.
நிஜ குத்துச்சண்டை வீரரைப்போல ஆஜானுபாகுவான உடற்கட்டுடன் பார்க்கவே மெர்சலை ஏற்படுத்துகிறார் ஜெயம்ரவி. கதைக்காக மெனக்கிடல் என்பது ஜெயம்ரவி கேரியசில் சூப்பராக ஒர்க்-அவுட் ஆகிறது என்பதற்கு இந்தப்படமும் ஒரு சிறந்த உதாரணம்.
தனியார் டிவி சேனல்கள் எப்படியெல்லாம் மக்களை சேனல் மோகத்தில் வைக்க திட்டம் போடுகிறார்கள். அதை வைத்து அவர்கள் எப்படியெல்லாம் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள் என்பதை எஸ்.பி.ஜனநாதனின் வீரியமுள்ள டயலாக்குகள் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியிருக்கின்றன.
குத்துச்சண்டை மேடையைச் சுற்றி விளம்பர நிறுவனங்களின் போர்டுகளை வைத்து அதையும் டிவிக்களின் காண்பித்து அவர்கள் காசு பார்க்கும் சுயநல பகட்டு மூளையை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள்.
இந்த மாதிரியான காட்சிகளும் ”சந்தேகப்படணும், நமக்கு நல்லது செய்றோம்னு சொல்லிட்டு செய்ற எல்லா விஷயங்களையும் நாம சந்தேகப்படணும்” மாதிரியான நிஜம் பேசும் வசங்களுமே படத்தின் விறுவிறுப்புக்கு கூடுதல் கேரண்டி.
நாயகி த்ரிஷா ஜெயம்ரவியின் திறமையில் விழுந்து தனது உடம்பில் டாட்டூஸ் கூட போட்டுக்கொள்கிறார். அந்தளவுக்கு அவர் மீது பைத்தியமாக இருப்பவருக்கு ஒரு டூயட் கூட வைக்காதது ஆச்சரியம் தான்!
ட்ரெய்னர்களாக வரும் பொன்வண்ணன், சண்முகநாதன், பெரிய இடத்துப் புள்ளையாக வரும் நாராயணன், ஜெயம் ரவியுடன் மோதி ஹாஸ்பிட்டலில் கிடக்கும் ஆறுமுகமாக வரும் வில்லன் என மற்ற கதாபாத்திரங்களின் தேர்வும் சிறப்பு.
தேசிய சாம்பியனாக வரும் அர்பித் கோபத்தில் கத்துகிற அளவுக்கு காட்சியில் செயல்கள் இல்லை என்றாலும் சர்வதேச சாம்பியனாக வரும் நாதன் ஜோன்ஸ் பார்ப்பதற்கே பயங்கரமாக காட்சியளிக்கிறார். அப்படிப்பட்டவரை விமான நிலையத்தில் வரவேற்கும் போது அவர் தலையை ஆட்டிக்கொண்டே வருவதும், ஜெயம்ரவியின் கூட்டணி அவருக்கு எதிராக கோஷம் போட்டு பெண்கள் ஆடையை அனுப்பி செய்யும் சேட்டைகளும் சிரிப்புக்கு உத்தரவாதம்.
உன்னை கொல்லாம விடமாட்டேன் என்று சபதம் செய்யும் அவர் கிளைமாக்ஸில் மனம் மாறி ஜெயம்ரவியிடன் சரண்டர் ஆவது ஆச்சரியம்.
வட சென்னையில் நடக்கும் கதை என்பதை செட்டுகள் போட்டுத்தான் காட்ட வேண்டுமா? அந்த அழுத்தங்கள் ரொம்பவே காட்சிகளில் குறைவு.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் ஒன்ஸ்மோர் ரகம் இல்லை என்றாலும் பின்னணி இசையும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நல்லவேளையாக படத்தின் வேகத்தை தடைசெய்யவில்லை.
லோக்கலான ஒரு பாக்சிங் வீரரை நம்பி 500 கோடி ரூபாய்க்கு ஒரு டிவி சேனல் பிசினஸ் செய்கிறது என்று சொல்வதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? இந்த மாதிரியான ஒரு சில லாஜிக் அபத்தங்களும், முதல் பாக ஸ்லோமோஷன் திரைக்கதையையும் கண்மூடி மறந்து விட்டு ரசித்தால் இந்த பூலோகம் ஜெயம் ரவியின் ஹிட் லிஸ்ட்டில் இன்னொரு ஹாட்ரிக் ஹிட்டு தான்!
பூலோகம் – ஜெயம் ரவிக்கு இன்னொரு ‘ஹாட்ரிக்’ ஹிட்!