தகராறு, தேன் ஆகிய படங்களின் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள அருள்வான் என்ன சொல்ல வருகிறது
தேனிமாவட்டம் அருகேயுள்ள மலையில் காடர்கள் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்வைச் சிதைக்கும் வேலையைச் செய்கிறார் ரேஞ்சர் ஜான் விஜய். அதை எதிர்க்கத் துணிகிறார் காடர் இன இளைஞரான ஆரவ். இந்த அத்துமீறலை எதிர்த்து போராட கல்வி ஒன்றே சரியான ஆயுதம் என உணர்கிறாள் ஆரவ் ரம்யா பாண்டியன் ஜோடியின் மகளான கிருத்திகா. கிருத்திகா கல்வியைத் தேடி பயணிக்கிறார். கல்வி அவருக்கு கிட்டியதா? என்பது படத்தின் க்ளைமாக்ஸ்
கதையின் நாயகியாக படத்தை தன் சிறுதோளில் தாங்கியுள்ளாள் சிறுமி கிருத்திகா. ஆகச்சிறந்த நடிப்பால் நம் மனதை கலங்கடிக்கிறாள். கலெக்டராக நடித்து பின்பாதி படத்தை தன் கன்ட்ரோலில் எடுத்து அசத்தியுள்ளார் அருள்நிதி. ஆரவ் ரம்யாபாண்டியன் இணை ஒரு காடர் இன ஜோடியாகவே தெரிகிறார்கள். பிரமாதம். ரேஞ்சராக வரும் ஜான் விஜய், பத்திரிகையாளராக வரும் காளிவெங்கட் ஆகியோர் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக செய்துள்ளனர்
தனது தனித்துவமான ஒளிப்பதிவால் படத்திற்கு பெரிய மகுடம் சூட்டியுள்ளார் சுகுமார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பாடல்கள் பின்னணி இசை இரண்டையும் கச்சிதமாக கொடுத்துள்ளார்
இயக்குநர் கணேஷ் விநாயகன் நல்ல கதையை, சொல்ல வேண்டிய கதையைத் தான் தேர்ந்தெடுத்துள்ளார். ஆனால் திரைக்கதையில் கமர்சியல் சேர்க்கத் தவறிவிட்டார். நிறைய காட்சிகளில் ஆவணப்படத்தின் Feel. நோக்கத்தை தெளிவாக வைத்திருந்த இயக்குநர் ஆக்கத்தில் இன்னும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். காடர் இன மக்கள் மட்டுமல்லாது மலைவாழ் மக்கள் அனைவருக்கும் கல்வி சென்றுசேர வேண்டும் என வலியுறுத்தியமைக்காக அருள்வானை நாம் ஆதரிக்க வேண்டும்
3/5