கார்த்தி தன் திரைவரலாற்றில் ஒரு இயக்குநருடன் இரண்டாவது முறை இணைவது இதுவே முதல்முறை என்பதால் விருமன் மீது எதிர்பார்ப்பு நிறையவே இருந்தது. எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி செய்திருக்கிறது கார்த்தி முத்தையா கூட்டணி
மதுரை ஏரியாவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் உள்ள குடும்பத்தின் கதை இது. கார்த்தி தன் அப்பா பிரகாஷ்ராஜை தன் வாழ்நாள் வில்லனாகப் பார்க்கிறார். அதற்கான காரணம் கதையில் ஸ்ட்ராங்காக இருக்கிறது. அந்தக் கதை என்ன? கதையின் முடிவு என்ன என்பதே விருமனின் கதை
நடிப்பில் கார்த்திக்கு இது அல்வா சாப்பிடும் கேரக்டர் என்பதால் துவம்சம் செய்திருக்கிறார். அவருக்கு இணையாக எழுதப்பட்டுள்ளது பிரகாஷ்ராஜ் கேரக்டர். அவரைச் சொல்லவே வேண்டாம். வெளுத்திருக்கிறார். அதிதி சங்கருக்கு இப்படம் ஓர் நல்வரவு. சூரி ஆச்சர்யமாக சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். வடிவக்கரசி, மனோஜ், இளவரசு என மேலும் சில கேரக்டர்கள் படத்தில் இருக்கிறார்கள்
யுவனின் பின்னணி இசைதான் படத்தில் பெரிய ஏமாற்றம். பாடல்களில் தாளம் போட வைத்தவர் பின்னணி இசையில் கோலம் போட தவறிவிட்டார். ஒளிப்பதிவு கனகச்சிதமாக அமைந்துள்ளது. படத்தின் எடிட்டர் முன்பாதியில் 20 நிமிடங்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் வெட்டி வீசியிருக்கலாம்
அப்பா மகனுக்குள் என்னதான் பகை மூண்டாலும் முடிவில் அது புகை போல விலகிவிடும் என்பதால் திரைக்கதையில் பெரிய சுவாரஸ்யம் நமக்கு ஏற்படவில்லை. புதிதாக எந்தக் காட்சியமைப்புகளும் படத்தில் இல்லை. வெகுசில இடங்களில் மட்டுமே எமோஷ்னல் கனெக்ட் ஆகிறது. உறவுகள் தான் வாழ்வின் பொக்கிசம் என்பதை ஆழமாக உணர்த்த நினைத்த இயக்குநர் இன்னும் முனைப்பு காட்டியிருக்கலாம். என்றாலும் விருமன் ஒருமுறை பார்க்கத் தகுந்தவன் தான்
2.75/5