வளர்ந்து வரும் கலைஞர்களை சினிமாவில் தனி அடையாளம் காட்டும் கார்த்திக் சுப்புராஜ்!

Get real time updates directly on you device, subscribe now.

karthi

பீட்சா, ஜிகர்தண்டா படங்களின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், தரமான  குறும்படங்களை வெள்ளித்திரைக்கு கொண்டு வருவதில் பேராதரவு அளித்து வருகிறது.

சென்ற ஆண்டு தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதுமை படைக்கும் வகையில், திரு. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஐந்து புதிய இயக்குனர்களின் கதைகளை, பெஞ்ச் டாக்கீஸ் எனும் தலைப்பில் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில், மார்ச் 6 ஆம் தேதி வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றது.

இதன் வெற்றியை தொடர்ந்து, இம்முறை, பெஞ்ச் டாக்கீஸ்-ன் இரண்டாம் பாகம் ‘அவியல்’ என்னும் தலைப்பில் வெளியாகிறது. அவியல், மக்களின் ரசனையை கவரும் விதத்தில் படைக்கப்பட்ட ஐந்து நகைச்சுவையான, ஜனரஞ்சகமான கதைகளின் கலவையாகும். இந்த படத்தில் நான்கு புதிய இயக்குனர்கள் – ஷம்மீர் சுல்தான், மோஹித் மெஹ்ரா, லோக்கேஷ் கனகராஜ், குரு ஸ்மாரன் மற்றும், ப்ரேமம், நேரம் போன்ற வெற்றித் திரைப்பங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனின் கதைகளும் இடம் பெறுகிறது.

பாகுபலி, காஞ்சனா 2, மாயா, அரண்மனை, டிமாண்டி காலனி, பிசாசு என பல மாபெரும் வெற்றி படங்களை வெளியிட்டு வெற்றி பெற செய்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ், அவியல் திரைப்படத்தை தமிழ்நாடு முழுவதும் மார்ச் 11 ஆம் தேதி வெளியிடுகிறார்கள்.

அவியல், கேரளா மற்றும் அமெரிக்காவிலும் அன்றே வெளியாகிறது.

திறமை வாய்ந்த நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்துவதில் பெரும் முனைப்பு காட்டி வருகிறது, ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம். அவ்வகையில், அவியல் திரைப்படத்தில், இளம் முன்னணி கதாநாயகர்கள் பாபி சிம்ஹா, நிவின் பாலி மற்றும் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்களான தீபக் பரமேஷ், அர்ஜூனன், ஷரத்குமார் உட்பட புதுமுகங்களான அம்ருதா ஸ்ரீனிவாசன், ரோஹித் மற்றும் மோசஸ் ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசை அமைத்தவர்கள், விஷால் சந்திரசேகர் (ஜில் ஜங் ஐக்), ராஜேஷ் முருகேசன் (ப்ரேமம் & நேரம்), ஜாவேத் ரியாஸ் மற்றும் ஷமீர் சுல்தான். அவியல் படத்திற்கான சிறப்பு தலைப்பு பாடலை இசையமைத்திருக்கிறார், ரகு தீக்ஷித் மற்றும் அதனை பாடி இருக்கிறார் பிரபலபாடகர் அந்தோணி தாசன்.

பெஞ்ச் டாக்கீஸ் இதே போன்று குறும்படங்களை வெள்ளித்திரையில் வெளியிட்டு, வளர்ந்து வரும் கலைஞர்களை ஊக்கப்படுத்துவதை தொடர்ந்து செய்து வரும். இனி வரும் மாதங்களில் மேலும் பல படங்களை இதைப்போல் வெளியிட்டு, இளம் தலைமுறையினருக்கு ஓர் அரிய பாதை அமைத்து தரும்.