உதவி இயக்குனர்களுக்கு சரியான சம்பளத்தை கொடுங்க..! – பாக்யராஜ் அட்வைஸ்
சின்னத்திரையில் பணிபுரியும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
உதவி இயக்குநர்களுக்கு மட்டும் எந்த விதமான ஒப்பந்தமும் இதுவரை போடவில்லை. பல வருடங்களாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசியும், கடிதம் எழுதியும், ஒப்பந்தம் செய்ய மறுப்பதை கண்டித்து உதவி இயக்குநர்களுக்கு உரிய சம்பளத்தை பெற்றுத்தர, சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத அறவழிப் போராட்டம் சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் பேசியதாவது ”உதவி இயக்குனர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது இயக்குனர்கள் தான். எங்களுக்கு உதவி இயக்குனர்கள் தேவை என்று இயக்குனர்கள் தான் பேசி புரிய வைக்க வேண்டும்.
ஒரு தொடருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2 லட்சம், ரூ.1.5 லட்சம் என்று கொடுக்கிறார்கள். சில தொடர்களுக்கு ரூ.75 ஆயிரம் கூட பெற்று கொண்டு எடுக்கிறார்கள். ஆகையால் எல்லோருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு என்னால் ஆன முயற்சிகளை மேற்கொண்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வேன்.
வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி சின்னத்திரையாக இருந்தாலும் சரி ஒரு சிலருக்கு தான் மார்க்கெட் இருக்கிறது. அப்படி மார்க்கெட் இருக்கிறவர்கள் தங்களுடைய உதவி இயக்குனர்களுக்கு ஒரு கணிசமான தொகையை அளிக்க வேண்டும்.
இந்த தொகையை வைத்துக் கொண்டு அவர்களை ஒரு சிறிய வீடு கூட ஒரு சிறிய வீடு கூட கட்ட முடியாது. உங்களுக்கு வரும் வருமானத்தைக் கொண்ட கார் வாங்க முடியாது ஒரு சிறிய இரண்டு சக்கர வாகனம் வாங்கி மகிழ்வதற்கு ஏற்ற வகையில் ஊதியம் கொடுக்க வேண்டும். எவ்வளவு ஊதியம் பெறுகிறார்கள் என்று தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது” என்றார்.