மனிதர்களின் உணர்வுகளைப் பேசும் பைரி-யாத்திசை இயக்குநர்!

Get real time updates directly on you device, subscribe now.

டி கே ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக வி துரைராஜ் தயாரிப்பில் ஜான் கிளாடி இயக்கத்தில் சையது மஜீத், மேக்னா எலன் மற்றும் விஜி சேகர் ஆகியோர் நடிப்பில் தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத முயற்சியாக அம்மா-மகன் சென்டிமென்டின் பின்னணியில் முழுக்க முழுக்க புறா பந்தயத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் பைரி. வரும் பிப்ரவரி 23 அன்று திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், பைரி திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன் பேசும் போது…

அனைவருக்கும் வணக்கம். பைரி என்கின்ற திரைப்படம் எனக்கு முதன் முதலாக சக்திவேலன் சார் அவர்கள் மூலமாகத் தான் அறிமுகமானது. நான் அவரை பார்க்கும் போதெல்லாம் அப்படத்தினைப் பற்றிப் பேசுவார். இயக்குநர் பேசும் போது வெகுளியாகப் பேசினார். ஆனால் அவருடைய படமும், அந்த கிராப்டிங்கும், அவர் ப்ரேமை கட்டமைத்த விதமும், அதில் கதாபாத்திரங்களை நடிகர்களை கையாண்ட விதமும் மிகச் சிறப்பாக ஆச்சரியப்பட வைக்கிறது. ஒரு படத்தை ஆடியன்ஸுக்கு நெருக்கமாக மாற்றுவது என்பது ஒர் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு. இது வெறும் புறா சண்டையாக நின்று போவதில்லை. அதனையும் மீறி மனிதர்களின் உணர்வு, அரசியல், அந்த சமூகத்தின் அரசியலைப் பேசுகிறது. புதுப்பேட்டை, ஆடுகளம் படங்களைப் போல் பைரி திரைப்படம் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் இந்த வருடத்தின் மிகப்பெரிய சம்பவமாக பைரி இருக்கும். இவ்வருடத்தின் மிக முக்கியமான படங்களில் பைரி கண்டிப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.