மும்பை வில்லன்களுடன் மோதிய பிரபுதேவா! – ‘சார்லி சாப்ளின் 2’ படத்திற்காக படமானது
பாலிவுட்டில் பிஸியான இயக்குநரான பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட பிரபுதேவா சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்ததும் மீண்டும் தமிழ்ப்படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்றான டி.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ்.
அந்த நிறுவனம் சார்பில் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘பார்ட்டி’ படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தயாரிக்கப்பட்டு வரும் படத்திற்கு ‘சார்லி சாப்ளின் -2’ என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் முதல் பாகத்தில் நடித்த பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். பிரபல இந்தி தெலுங்கு நடிகையான அதாஷர்மா இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத், நட்புக்காக வைபவ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஷக்தி சிதம்பரம்.
”முழுக்க முழுக்க கமர்ஷியல், காமெடி படமாக சார்லி சாப்ளின் உருவாகி வருகிறது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பிரபுதேவா, மகதீரா வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கர சண்டைக் காட்சி படமாக்கப் பட்டது.
அத்துடன் பிரபுதேவா – சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக் காட்சி ஒன்றும் அங்கேயே பிரமாண்டமாக படமாக்கப் பட்டது. மிக பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப் பட்டு இரண்டு சண்டைக் காட்சிகளும் படமாக்கப் பட்டது” என்றார்.