‘ஒரு வேகத்துல பேசிட்டாப்ல…’ – தொகுப்பாளருக்காக வருத்தம் தெரிவித்த பிரபு!
நிகழ்ச்சிக்கு சுவாரஸ்யம் கூட்டுகிறேன் என்ற பெயரில் சில தொகுப்பாளர்கள் மேடையில் படக்குழுவினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தி விடுவார்கள். அப்படி ஒரு கூத்து தான் உத்தரவு ‘மகாராஜா’ பட விழாவில் நடந்தேறியது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உதயா நாயகனாக நடித்து இந்த மாதம் வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘உத்தரவு மகாராஜா’. இதில் உதயா மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.
ஆஸிப் குரைஷி இயக்கத்தில் நகைச்சுவை கலந்த சைக்கோ திரில்லராக தயாராகியிருக்கும் இப்படத்தில் ‘திருநெல்வேலி’ படத்துக்குப் பிறகு பிரபு உதயாவுடன் மீண்டும் இதில் இணைந்து நடித்திருக்கிறார். நாயகிகளாக சேரா, ஸ்ரீபிரியங்கா, மிஷாகோல் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன், மன்சூர் அலிகான், மனோ பாலா, அஜய் ரத்னம், குட்டி பத்மினி, ‘சன் டிவி’ ஆடம்ஸ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தப் படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சன் டிவி தொகுப்பாளர் ஆடம்ஸ், ‘விஜய்யின் ‘சர்கார்’ படத்துக்கு விளம்பரமே தேவையில்லை. ஆனால் அந்த படத்தின் மீது வழக்கு போட்டு புரோமோஷன் தருகிறார்கள். ஆனால் எங்கள் படத்தின் மீதும் யாராவது வழக்கு போட்டால் எங்களுக்கும் புரோமோஷனாக இருக்கும்.
எச்.ராஜா போன்றோர் எங்கள் படம் பற்றி ஏதாவது பேசினால் கூட, அதுவும் படத்துக்கு ஒரு விளம்பரமாக இருக்கும். இதை ஒரு ஆதங்கத்தில் தான் நான் சொல்கிறேன்’ என்றார்.
ஆடம்ஸின் பேச்சைக் கேட்டு அதிர்ந்து போன நடிகர் பிரபு ”ஆடம்ஸ் ரொம்ப நல்ல பையன். அவர் ஏதோ ஒரு வேகத்தில் அப்படி பேசி விட்டார். அதை பெரிதுபடுத்தாதீர்கள். அவருக்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன்’ என்றார்.