அருள்நிதி- பிரியா பவானி ஷங்கர் நடிக்கும் ‘டிமாண்டி காலனி2’!

அஜய் ஞானமுத்து ‘டிமாண்டி காலனி’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் வசூலிலும் சாதனை படைத்தது. ஹாரர் ஜானரில் இந்தத் திரைப்படம் புதிய பென்ச் மார்க்கை உருவாக்கி தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த வழக்கமான மற்றும் பழமையான விஷயங்களை உடைத்தது. திறமையான நடிப்பைக் கொடுத்திருந்த நடிகர் அருள்நிதிக்கு இன்னொரு மகுடமாக இந்தப் படம் அமைந்தது. படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆன போதிலும் இப்போது பார்த்தாலும் புது அனுபவத்தையே பார்வையாளர்களுக்கு கொடுத்து வருகிறது. அருள்நிதி & அஜய்ஞானமுத்துவின் வெற்றிக் கூட்டணி தற்போது ‘டிமாண்டி காலனி2’ படத்திற்காக மீண்டும் இணைந்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
தற்போது படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு ஒசூரில் மிகக்குறைந்த நாட்களுக்குள் நிறைவடைந்துள்ளது. இது படத்தின் 40% படப்பிடிப்பும் முடிந்துள்ளது என படக்குழு மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளது. இதை முடிக்க சாத்தியப்படுத்திய தன்னுடைய படக்குழுவின் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருமான அஜய் ஞானமுத்து நன்றி தெரிவித்துள்ளார். மேலும், படம் நன்றாக வந்திருப்பதையும் தெரிவித்து இருக்கிறார்.
‘டிமாண்டி காலனி2- Vengeance of the Unholy’ என்ற டேக்லைன் கொண்ட இந்தப் படத்தில் அருள்நிதி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார்.ஞானமுத்து பட்டறை மற்றும் ஒயிட் நைட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து ‘டிமாண்டி காலனி2’ படத்தைத் தயாரிக்கிறார்கள். அடுத்தக் கட்டப்படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.