எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா சினிமாவை காப்பாற்றினார்கள்! ஆனா நீங்க… : எடப்பாடியை வெளுத்து வாங்கிய விக்ரமன்!

நாடு முழுவதும் ஒரே வரி என்று விளம்பரப்படுத்தப்பட்டது ஜி.எஸ்.டி வரி.
இப்போது தமிழ்த்திரைப்படத் துறைக்கு மட்டும் ஜி.எஸ்.டி மற்றும் மாநில அரசின் உள்ளூர் வரி என இரட்டை வரிகளைக் கொண்டு வந்ததையடுத்து ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறது. திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்தம், திரைப்பட சங்க நிர்வாகிகளின் பேச்சு வார்த்தை என அடுத்தடுத்த நகர்வுகளுக்கு இன்னும் முடிவு தெரியவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த திரையுலக பிரபலங்கள் ஏறுகிற மேடைகளில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இயங்கும் தமிழக அரசை வசைமாறி பொழியத் தொடங்கியுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரியைப் பற்றி மட்டுமில்லாமல் தமிழக அரசின் உள்ளூர் வரியையும் கடுமையாக விமர்சனம் செய்தார் நடிகர் மன்சூர் அலிகான். அதோடு வரிச்சலுகைக்காக எந்தெந்த படத்துக்கு எத்தனை லட்சங்கள் லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்பது பற்றியும் பேசி பரபரப்பைக் கிளப்பினார். கமலும் ஊழல் செய்வதில் தமிழகம் பீகாரை மிஞ்சி விட்டது என்றும் கடுமையாக சாடியிருந்தார்.
இந்நிலையில் நான் யாரென்று நீ சொல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் விக்ரமன் எடப்பாடி அரசை வெளுத்து வாங்கினார்…
நிகழ்ச்சியில் பேசிய அவர் ”நான் வழக்கமாக இது மாதிரி இசை வெளியீட்டு விழாவில் படத்தைப் பற்றி மட்டும் தான் பேசுவேன். மற்ற விஷயங்களை பேச மாட்டேன்.
ஆனால் இங்கு பொதுவான விஷயம் ஒன்றை பேச வேண்டி உள்ளது. நேற்றும் இன்றும் திரையரங்குகள் மூடப்பட்டது சினிமாவுக்கு பெரும் இழப்பு.ஜி.எஸ்.டி 28 % இது தவிர மாநில வரி 30% இது இல்லாமல் மாநிலம் வசூலிக்கும் வரி 30% க்கு 28% ஜி.எஸ்.டி என தனிவரி என மொத்தம் 65% வரியாக போனால் எப்படி சினிமா வாழும்? வரிக்கு வரி என்பது எப்படி சாத்தியமாகும்.
ஜிஎஸ்டி கட்ட தயாராக இருக்கிறார்கள். மாநில அரசு தனது வரியை நீக்க வேண்டும். எம்ஜிஆர் நூற்றாண்டு நடக்கிற இந்த காலகட்டத்தில் இதை மாநில அரசு யோசிக்க வேண்டும். கலைஞர் கொண்டு வந்த அந்த வரிச்சலுகையை புரட்சித் தலைவியும் கடை பிடித்தார். கலையுலகிலிருந்து முதல்வராகி எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா சினிமாவை காப்பாற்றியது மாதிரி முதல்வர் எடப்பாடி அவர்கள் வரிவிலக்கு அளித்து சினிமாவை காப்பாற்ற வேண்டும்”.