”பிரச்சனை வந்தா பதுங்கிற நீயெல்லாம் பாயும்புலியா? தம்பி நாக்கை அடக்கிப் பேசு” : விஷாலுக்கு தாணு எச்சரிக்கை!

உச்சக்கட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்.
இந்தத் தேர்தலில் ராதாகிருஷ்ணன் தலைமையிலான முன்னேற்ற அணிக்கும், விஷால் தலைமையிலான அணிக்கும் தான் நேரடிப் போட்டி.
சங்கத் தேர்தலில் தனி அணியாகப் போட்டியிட்ட டி.சிவா தலைமையிலான அணி போட்டியிலிருந்து விலகியதுடன் முன்னேற்ற அணிக்குத் தன் ஆதரவைத் தெரிவித்துச் செயல்படத் தயாராகி விட்டது. அதன் சங்கமமாக நேற்று பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது.
நிகழ்ச்சியில் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது, “இளைய தலைமுறைக்கு வழிவிட்டு நான் விலகியிருந்தேன். விஷாலின் பேச்சு, நடை, உடை, பாவனை பார்த்து தவறான முன் உதாரணமாகிவிடக் கூடாது என்று தான் நான் இங்கு வந்தேன்.
தம்பி டி.சிவாவை முரளிதரன் முன் மொழிந்த போது சரி என்று நினைத்திருந்தேன். பலரும் ஏன் இத்தனை அணி என்று கேட்டார்கள். விஷாலின் யதேச்சதிகாரம், ஆணவம். அகங்காரம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரது நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது.
தேசிய விருது பெற்ற சேரனுக்கு 5000 ரூபாய் தரச் சொல்கிறார். 2012ல் ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்துக்கான சிக்கலில் கௌதம்மேனன் நின்ற போது ஒரு கோடி ரூபாய் நான் உதவி செய்தேன்.

‘பாயும்புலி’ பட சிக்கல் வந்த போது விஷால் போனை ஆப் செய்து பதுங்கி விட்டார். பிரச்சினை வந்தால் பதுங்கும் நீயெல்லாம் பாயும் புலியா? ஒரு முறை 50 லட்ச ரூபாய் பிரச்சினையில் என்னிடம் வந்து பவ்யமாகக் கெஞ்சினார்.
சங்கத்தில் சிரமப்படும் 1512 தயாரிப்பாளர்களில் 12 பேர் உன்னை வைத்துப் படமெடுத்தவர்கள். விஷால் தம்பி வாயை அடக்கிப் பேசு நாவடக்கம் தேவை. தம்பி விஷால் “மதகஜராஜா’ 30 கோடி பிரச்சினையில் உள்ளது.
நீ என்ன புரட்சி செய்தாய்? புரட்சி தளபதி என்கிறாயே.. உன்னைப் பற்றி ஏராளமான புகார்கள் இருக்கின்றன. வரும் 26-ஆம் தேதி ஆதாரங்களுடன் வெளியிடுவேன்.
ஞானவேல்ராஜா என்னென்னவோ பேசுகிறார் கொம்பன்’ படத்துக்கு பிரச்சினை வந்தபோது அழுததும் நாங்கள் உதவியதும் நினைவில்லையா?
பிரகாஷ்ராஜ் ஏதேதோ பேசுகிறார் அவர் ஒழுங்காக நேரத்துக்குப் படப்பிடிப்பு போனதுண்டா? உங்கள் மேல் எவ்வளவு புகார்கள்?
இப்படிப்பட்டவர்களிடம் தயாரிப்பாளர் சங்கம் போகலாமா? ” இவ்வாறு தாணு பேசினார்.
நிறைவாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் முன்னேற்ற அணி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.