திரையுலகினர் கடும் எதிர்ப்பு – பட ரிலீசை தள்ளி வைத்தார் கார்த்திக் சுப்பராஜ்!
ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் நடந்து வரும் வேலை நிறுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த வேலை நிறுத்தத்தை நீர்த்துப் போகச் செய்ய டிஜிட்டல் நிறுவனங்களும், திரையரங்க உரிமையாளர்கள் சிலரும் சுயநலமாக காய்களை நகர்த்தினாலும் ஒட்டுமொத்த திரையுலகமும் ஒற்றுமையாக இருந்து தீர்வு வரும் வரை புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாது என்று போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இதையும் மீறி, தனது ‘மெர்க்குரி’ படத்தை வெளியிடப்போவதாகவும், என் படத்திற்கு ரத்தம், வியர்வை சிந்தி உழைத்த படக்குழுவினருக்காகவும் படத்தை வெளியிட்டாக வேண்டிய சூழலில் இருக்கிறோம். ஏப்ரல் 13 அன்று படம் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
அவருடைய இந்த அதிரடி முடிவுக்கு திரையுலகினர் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்து ரஜினியை வைத்து படம் இயக்கப் போவதால் அந்தத் திமிரில் இப்படி ஒரு வேலையைச் செய்து வேலை நிறுத்தத்தை எந்த ஒரு தீர்வும் இல்லாமலேயே முடிவுக்குக் கொண்டு வர நினைக்கிறாரா என்றும் விமர்சனம் செய்தனர்.
இதையடுத்து மெர்குரி படத்தை தான் ஏப்ரல் 13-ம் தேதி ரிலீஸ் செய்யப்போவதில்லை என்றும், திரையுலகின் நலனுக்காக நடத்தப்படும் போராட்டம் முக்கியம் ஆயிரக்கணக்கான திரையுலகினரைப் போலவே நாங்களும் நல்ல முடிவு எட்டப்படும் எனக் காத்திருக்கிறோம் என்று விளக்கமளித்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.