‘கும்கி 2’ ஹீரோயினுக்காக சிரமப்படும் பிரபு சாலமன்!
6 ஆண்டுகளுக்கு பிறகு ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது ‘கும்கி 2’.
பிரபு சாலமன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. மற்றும் வில்லனாக ஹரிஷ் பெராடி, ஆர்.ஜே.பாலாஜி,சூசன், கோலங்கள் திருச்செல்வம்,ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் நடிக்கிறார்கள். டைட்டில் கதாப்பாத்திரமாக உன்னிகிருஷ்ணன் என்ற யானை நடிக்கிறது.
ஒளிப்பதிவு – சுகுமார், இசை – நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டிங் – புவன், தயாரிப்பு – பென் இந்தியா லிமிடெட் திரு ஜெயந்திலால் காடா.
படம் பற்றி இயக்குனர் பிரபு சாலமன் பேசியதாவது…
”படப்பிடிப்பு தற்போது மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் விறு விறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்த ‘இதயக்கனி’ படப்பிடிப்பிற்கு பிறகு ‘கும்கி 2’ படப்பிடிப்பு தான் அங்கு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்காக இரண்டு விஷயங்களில் சிரமப்பட்டோம். ஒன்று யானை.. அது கிடைத்து விட்டது. மற்றொன்று படத்தின் நாயகி.. இன்னும் கிடைக்கவில்லை. தேடிக்கொண்டிருக்கிறோம். நாயகி இல்லாத காட்சிகளை மட்டுமே தற்போது படமாக்கி வருகிறோம்” என்றார் பிரபுசாலமன்.