பிச்சைக்காரனா இருந்தாலும் ஒபாமாவா இருந்தாலும் வாழ்க்கையில நிம்மதி வேணும்ல…?
சென்னையைத் தாண்டி புறநகர்ப் பகுதியில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் ‘மானிடன்’.
இப்படத்தை இயக்குபவர் ஒய். முனிஷ். இவர் உதவி இயக்குநராக தமிழ், தெலுங்கு டிவி தொடர்கள், படவிவாதங்கள் என்று ஈடுபட்டு பரவலான பணி அனுபவம் பெற்றவர் .
‘மானிடன்’ படத்தை ஏ.எஸ்.எஸ். மூவீஸ் சார்பில் அசோக்குமார் தயாரிக்கிறார். ரக்ஷன் நாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘திருட்டு ரயில்’ படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பவர்.
நாயகி புதுமுகம் அட்சயப் பிரியா. மற்றும் சீதா, விஜயகுமார், பாவா லெட்சுமணன், ‘கதகளி’யில் வில்லனாக நடித்த ஆத்மா, ரங்கம்மாள் பாட்டி ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் அசோக்குமாரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் .
தமிழ்சினிமாவில் பெரும்பாலான கதை நாயகர்கள் சுற்றித் திரியும் சோம்பேறிகளாகவோ, வேலை வெட்டி இல்லாதவர்களாகவோ தான் வருகிறார்கள். ஆனால் ‘மானிடன்’ நாயகன் வேறுமாதிரி இருப்பான்.
“2020ல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளப் போகிறது, பிரச்சினையை சந்திக்கப் போகிறது. இப்போது நாம் வாழும் வாழ்க்கையின் விளைவு தான் அப்படி வர இருக்கிறது. அது யாருக்கானது? என்றால் எல்லாருக்குமானதுதான். பிச்சைக்காரன் முதல் ஒபாமா வரை நிம்மதியாக வாழ எது தேவையோ அதைப்பற்றி சொல்லும் படம். அப்படி இருக்கும் பிரச்சினை என்ன என்று படத்தில் தெரியும்.
வருங்கால ஆபத்தைப் பற்றிக் கவலையுடன் எச்சரிக்கும் படமாக ‘மானிடன்’ இருக்கும்’. இது காதல், நகைச்சுவை, எல்லாமும் கலந்த சமூகப்பொறுப்புள்ள கதையாக இருக்கும்.” என்கிறார் இயக்குநர்.
ஊத்துக்கோட்டை, சுருட்டப்பள்ளி ,சாலக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. தமிழக ஆந்திர எல்லையில் உள்ள சுருட்டப்பள்ளியில் இதுவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி,ராமராவ் மூவரும் தான் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர். அவர்கள் மூன்று பேருமே முதல்வராகி விட்டனர். நான்காவது படமாக அங்கு படப்பிடிப்பு நடக்கும் படம் தான் ‘மானிடன்’.
படத்துக்கு முந்தைய பணியான கதை, திரைக்கதை அமைக்கவே ஓராண்டு செலவிட்டுள்ளனர் . படத்துக்கு ராம்ஜி இசையமைக்கிறார். 3 பாடல்கள் பதிவாகிவிட்டன. ஒரு கானா பாடலும் உண்டு.
ஒளிப்பதிவு செந்தில் குமார். இவர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் உதவியாளர். நடனம்–சதிஷ் குமார். சண்டைப் பயிற்சி – ராஜேஷ் கண்ணன். இவர் பெப்ஸி விஜயனின் உதவியாளர்
வருகிற 22ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. 40 நாட்களில் முழுப்படத்தையும் முடிக்கும் முனைப்போடு திட்டமிட்டு வருகிறார்கள்.
.