காவல் ஆய்வாளராக சாய் தன்ஷிகா நடிக்கும் ‘யோகிடா’ !

பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த, சமீபத்தில் வெளியான ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடரிலும் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்திய ‘சாய் தன்ஷிகா’ முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படம் ‘யோகிடா’. இத்திரைப்படத்தில் சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்திற்கு கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் கௌதம் கிருஷ்ணா. மலையாளத்தில் ‘லூசிஃபர்’ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் தமிழில் ‘சாது மிரண்டா’ போன்ற படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்ற தீபக் தேவ் படத்திற்கு இசையமைத்துள்ளார். தவசி,நரசிம்மா போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.KA.பூபதி ஒளிப்பதிவை மேற்கொள்ள, G சசிக்குமார் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். விவேகம், சிறுத்தை போன்ற படங்களில் அதிரடி காட்சிகளை உருவாக்கிய சண்டை பயிற்சியாளர் K. கணேஷ்குமார் குமார் படத்தில் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.
இத்திரைப்படத்தில் சாய்தன்ஷிகா குறுகிய காலத்தில் அதிக டிரான்ஸ்ஃபர் பெற்ற நேர்மையான காவல் ஆய்வாளராக நடிக்கிறார். தான் வேலை பார்க்கும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொல்லப்படுகிறார். அதை அவரது குடும்பத்தார் தற்கொலை என மாற்ற முயற்சிக்கின்றனர். இருப்பினும் அதை கொலை என நிரூபித்து குற்றவாளியை கைது செய்கிறார் சாய் தன்ஷிகா. ஆனால் குற்றவாளியை விடுவிக்க சொல்லி பல தரப்பில் இருந்தும் அவருக்கு அழுத்தம் தரப்படுகிறது. அதற்கு மறுப்பதால், இதைவிட மோசமான பகுதிக்கு அதிகாரத்தில் உள்ளவர்கள் மீண்டும் அவரை டிரான்ஸ்ஃபர் செய்கிறார்கள்.
இங்கு சாய் தன்ஷிகா சந்திக்கும் பல்வேறு திகைக்க வைக்கும் சம்பவங்களால், அவர் அனுபவிக்கும் பல்வேறு இன்னல்களை சமாளித்து வெற்றி பெற்றாரா? என்பதே யோகிடா.
எத்தனை மனிதர்கள் எதிர்த்தாலும் உண்மை உண்மைதான் – எத்தனை மனிதர்கள் ஆதரித்தாலும் தவறு தவறுதான் என்ற உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சாய் தன்ஷிகா!
இத்திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இத்திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ராதாரவி, நடிகர் விஷால், இயக்குனர் சங்க தலைவர் RV உதயகுமார், பேரரசு, மித்ரன் R ஜவஹர், மீரா கதிரவன் ஆகியோருடன் படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு விஷால்-சாய் தன்ஷிகா திருமண அறிவிப்பு மேடையாகவும் மாறியதால் அனைவரும் இருவரையும் வாழ்த்திப் பேசினார்.