தனியார் பள்ளிகளின் குட்டு உடைகிறதா? : ‘பென்சில்’ படத்துக்கு எதிராக திரளும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள்!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் ஹீரோவாக முதலில் கமிட்டான படம் ‘பென்சில்’.
ஸ்ரீ திவ்யா நாயகியாக நடிக்க, மணி நாகராஜ் இயக்கத்தில் இந்தப்படம் ஆரம்பித்ததிலிருந்தே பைனான்ஸ் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்து வந்தது.
ஒருவழியாக எல்லா சிக்கல்களையும் தாண்டி நாளை மே 13ம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸாகிறது. இந்த நேரத்தில் இப்படத்துக்கு எதிராக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஒன்றிணைந்து படத்துக்கு தடை விதிக்க ஏற்பாடுகளை செய்யத் துவங்கியிருக்கிறார்களாம்.
அப்படி என்ன படத்தில் சூடு கிளப்பும் விவகாரம் என்கிறீர்களா?
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு கொடுத்து மூடி மறைத்து விடுகிறது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தான் இந்தப்படம் தயாராகியிருக்கிறதாம்.
அது மட்டுமில்லாமல், நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர், மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றன.
அதோடு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விஷயம் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாம். இந்தச் சம்பவங்கள் எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் குட்டுகளை உடைக்கிறது இந்தப் படம்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் பிரபலமான சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் ஒன்று திரட்டி படத்திற்குத் தடை விதிக்க ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனவாம்.
”இது ஒரு த்ரில்லர் படம். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று நிகழ்கிறது. அதை அவர்கள் எப்படி சமாளித்து வெளியே வருகிறார்கள்” என்பதுதான் திரைக்கதை என்று இப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் படத்தைப் பற்றி ஏற்கனவே ஊடகங்களிடம் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகம் சரிதான் போலிருக்கு…!