இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு ஹாரர் படம் ‘படித்தவுடன் கிழித்து விடவும்’

Get real time updates directly on you device, subscribe now.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும்.

அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் ‘படித்தவுடன் கிழித்துவிடவும்’ அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது. இந்த படத்தை ஐ கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக தயாரித்திருப்பவர் ஆர்.உஷா.

கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் பான்பராக் ரவி, காதல் சரவணன், நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லனாக எஸ்.எம்.டி. கருணாநிதி அறிமுகமாகிறார்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை இயக்குகிறார் செ.ஹரிஉத்ரா. இவர் ஏற்கனவே மீத்தேன் திட்டத்தால் விவசாய நிலங்கள் எப்படி பாதிக்கப்படுகின்றன என்பதை மையமாக வைத்து ‘தெருநாய்கள்’ என்ற படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தில் இன்சூரன்ஸ் மோசடியின் பின்னணி குறித்து ஹாரர் படமாக இயக்கியிருக்கிறார். படம் பற்றி ஹரிஉத்ராவிடம் கேட்டபோது…

இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் சில விஷயங்களை செய்வதோடு விட்டு விடுகிறோம். அப்படி விட்டு விடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்குகூட செய்கிறோமே இன்சூரன்ஸ் அதுதான். அதைப் பற்றிய ஒரு சிறு பயணம் தான் இந்த ‘படித்தவுடன் கிழித்து விடவும்’.

இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை சம்மந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன் வருவதும் இல்லை. இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளன.

அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியை பழிவாங்கியது? என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக திரைக்கதை அமைத்துள்ளோம்.

பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரமாண்டமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம். 90 சதவீதம் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம்.

அதற்காக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட் ஹீலியம் என்ற புதுவகையான கேமராவில் CP3 எனும் லென்ஸை பயன்படுத்தியுள்ளோம். அது இரவு நேர படப்பிடிப்பு காட்சிகளை மிக துல்லியமாக படம் பிடித்துள்ளது.

படப்பிடிப்பு மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் செ.ஹரிஉத்ரா.