போலீஸ் அதிகாரியாக ரகுமான் ஆடும் பகடி ‘ஆட்டம்’

மரம் மூவீஸ் பட நிறுவனம் சார்பாக டி.எஸ் குமார், கே.காமராஜ், பரணி மூவீஸ் சார்பாக ஏ.குணசேகர், டி.சுபாசந்திரபோஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ”பகடி ஆட்டம்” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் ரகுமான் சைபர் கிரைம் போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். சமுத்திரகனி இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த படத்தில் போலி சான்றிதழ் தயாரிக்கும் அதிரடி வேடத்தில் நடித்த கௌரி நந்தா இந்த படத்தில் கதையின் நாயகி வேடத்தில் நடிக்கிறார்.
ஒரு பெண் நினைத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்ற உயரிய கொள்கையுடைய வீர மங்கையாக ஆட்டோ ஓட்டும் வேடத்தில் கௌரி நந்தா நடிக்கிறார். மற்றும் நிழல்கள் ரவி, சுதா, சிசர் மனோகர், கருத்தம்மா ராஜஸ்ரீ, சுப்புராஜ், சாட்டை ரவி, மற்றும் சுரேந்தர், மோனிகா, சஹானா, திவ்யஸ்ரீ, கமலி, அஸ்வதி நாயர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ராம்கே சந்திரன்
படம் பற்றி இயக்குனர் ராம்.கே.சந்திரனிடம் கேட்டோம்…
நான் இயக்குனர் மகேந்திரனிடமும், லேனா மூவேந்தர், செல்வராஜ் ஆகிய இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றி உள்ளேன். அனைத்து வசதிகளும் உள்ள ஒருவனுக்கும், அன்றாட வாழ்க்கைக்காகப் போராடும் பெண் ஒருவருக்கும் இடையே நடக்கும் போராட்டமே இப்படத்தின் கதைக்களம்.
நவீன உலகின் பொருளாதாரம் மற்றும் டெக்னாலஜி எப்படி ஒருவனது வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது என்பது கதையின் முக்கிய அம்சம். படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடைபெற்றிருக்கிறது என்றார் இயக்குனர் ராம்கே சந்திரன்.