புதுமை செய்வதிலும் என்னை முந்தி கொண்டார் கமல்! : பார்த்திபனின் ‘பீலிங்க்ஸ்’ பேச்சு

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரபலமான ஓவியர் A.P.ஸ்ரீதர் கலை வண்ணத்தில் உருவான இந்தியாவின் முதல் தந்திரக் கலை அருங்காட்சியகமான ‘க்ளிக் ஆர்ட்’ அருங்காட்சியகத்தை பிரபல இயக்குநரும், நடிகர்ருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் நடிகர் விக்ரமின் தாயாரான திருமதி ராஜேஸ்வரி ஆகியோர் ஊடகங்களின் முன்னிலையில் துவக்கி வைத்தனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள், நிகழ்ச்சியில் குத்து விளக்கிள் உள்ள தீபத்தை கையால் வரைந்து ஏற்றியது வித்தியாசமாக அமைந்தது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன் “நாம் ஏதாவது புதுமையாக செய்ய முயன்றால் அதை முந்திக் கொண்டு செய்ய இங்கே கமல்ஹாசன், A.P ஸ்ரீதர் போன்ற பல பேர் இருக்கிறார்கள் ‘நானும் ரவுடி தான்’ படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தை தனியாக எடுத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் தசாவதாரத்தின் பல்ராம் நாயுடுவை தனியாகப் பிரித்து ஒரு படமாக்கி கமல் அந்த வேலையை ஆரம்பித்து விட்டார்.
குத்து விளக்கு ஏற்றுவதை நெருப்பு இல்லாமல் ஓவியமாக எதாவது ஒரு நிகழ்ச்சியில் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் இங்கே ஸ்ரீதர் செய்து விட்டார். தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் புதுமை செய்வதிலும் போட்டி வந்து விட்டது. அதோடு அதை உடனே செய்யவும் வேண்டியிருக்கிறது. இல்லையென்றால் நாம் யோசித்து செய்வதற்குள் அதை வெறோருவர் செய்து விடுகிறார். அந்த வகையில் இந்த ட்ரிக் ஆர்ட் மியூசியம் உண்மையிலேயே ஒரு சுவாரஸ்யமான அனுபவம்” என்றார் .
நிகழ்ச்சியில் பேசிய ஏ.பி.ஸ்ரீதர் ” இது போன்ற தந்திரக் கலை ஓவியக் காட்சியகங்கள் உலகம் முழுக்க 12 நாடுகளில் 42 இடங்களில் இது இருக்கிறது. பார்வையாளரின் பங்களிப்பு இல்லாமல் இவை முழுமை அடையாது. இந்தியாவில் இதுதான் முதல் முறையாக சென்னையில் அறிமுகமாகியிருக்கிறது. அடுத்து பெங்களூர், மும்பை உள்ளிட்ட இடங்களிலும் இதை அமைக்க இருக்கிறேன். இங்கே பெரியவர்களுக்கு கட்டணம் 150 ரூபாய். சிறியவர்களுக்கு 100 ரூபாய் ” என்றார்.
இதில் என்ன சிறப்பு?
“தந்திரக் கலை” மூலம் இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாண ஓவியமாகத் தெரியும் விதமான தந்திரங்கள் நிறைந்த கலைப் பொருள்கள் இங்கு நிறுவப்பட்டிருகின்றன. இதுவரை ஓவியம் என்பது அழகியல் தன்மை கொண்டது, கலைப்பொருள் சேகரிப்பாளர்களுக்கான முதலீடு அல்லது தெய்வீகமானது என்று தான் பார்க்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இந்த ட்ரிக் ஆர்த்வகை ஓவியம் அல்லது ஓவிய அருங்காட்சியகம் என்பது வேடிக்கையானதாக, நகைச்சுவை ததும்பும் விதமாக, உரையாடல் தன்மை கொண்டதாக இருக்கும். தந்திரக் கலை ஓவியங்கள் என்பது அப்படிப்பட்ட கலை, பங்கேற்பாளர் இன்றி இந்த ஓவியங்கள் முற்றுப் பெறாது . இது “ஒளியியல் மாயக் கலை” (Optical Art) அல்லது முப்பரிமாண ஓவியங்கள் (3D Art) என்றும் அறியப்படுகிறது. பார்ப்பவர் அந்த ஓவியத்துடன் ஓர் விளையாட்டிலோ அல்லது செய்கையிலோ ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமான கோணங்களுடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.
‘க்ளிக் ஆர்ட் மியுசியம்’ ஒளியியல் மாய ஓவியங்கள் நிறைந்த இடமாக, உங்கள் அதிக மூளைக்கு வேலை கொடுக்கும் ஓர் இடமாக இருக்கும்! கச்சிதமான உள்கட்டமைப்பும், புதுமையான ஓவியங்களும் பார்வையாளரை வேறொரு உலகத்திற்கு, ஒரு மாய உலகிற்குக் கூட்டிச் செல்லும்படி இருக்கும்” என்றார்.