‘ஆமாம், நாங்கள் பொறுக்கிகள் தான்’ – பட விழாவில் பொங்கிய பியூஸ் மனுஷ்..!
மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் திட்டங்களைக் கொண்டு வருகிற அரசுகளை விமர்சிப்பவர்கள் அத்தனை பேருக்கும் ‘சமூக விரோதிகள்’ என்று பட்டம் சூட்டுகிறது ஒரு கும்பல்.
அவர்களை விட ஒருபடி மேலே போய் தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை பேரையும் ‘பொறுக்கிஸ்’ என்று சொல்லி சர்ச்சையைக் கிளப்பியவர் பி.ஜே.பியைச் சேர்ந்த சுப்ரமணிய சுவாமி.
இப்போது அவர் சொன்ன அந்த வார்த்தையையே தனது படத்துக்கு டைட்டிலாக வைத்து பொறுக்கிஸ் என்ற பெயரில் படமாக இயக்கியிருக்கிறார் பிசாசு, சவரக்கத்தி படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மஞ்சுநாத்.எஸ்.
கே.என்.ஆர் மூவிஸ் சார்பில் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் டைட்டிலுக்கு கீழே ‘அல்ல நாங்கள்’ என்ற சப் டைட்டிலும் இடம் பெற்றுள்ளது.
படத்தின் தயாரிப்பாளர் ராஜாவே கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக லவனிகா நடித்துள்ளார். கதையின் மையத்தூணாக ராதாரவி நடித்துள்ளார். ரவிவர்மா இசையமைத்துள்ளார். ஆலயமணி நான்கு பாடல்களை எழுதிப் பாடியுள்ளார். ஜூலியன் எடிட்டிங்கை கையாண்டுள்ளார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் நடிகரும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், இயக்குநர் கரு.பழனியப்பன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் பேசும்போது, “ஒரு வகையில் நங்கள் பொறுக்கிஸ் தான். அரசாங்கம் போடுற குப்பையை அள்ளிக்கிட்டு இருக்கிறோம். ரிலையன்ஸ் போடுற பிளாஸ்டிக்கை பொறுக்கிட்டு இருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆசிட் கழிவுகளை உள்ளுக்குள்ள ஊத்திக்கிட்டு இருக்கிறோம். லேட்டஸ்ட்டா வாமிட்.ராஜா, அர்ஜுன் சம்பத் போன்றவர்கள் வார்த்தைகளில் எடுக்கும் வாந்தியையும் பிடித்துக் கொண்டு இருக்கிறோம்.
தமிழ்நாட்டை ஒரு பரிசோதனை சாலையாக பயன்படுத்தி வேட்டையாடிக் கொண்டு இருக்கிறார்கள். நமது முதல்வருக்கு மக்களை துன்புறுத்துவதில் விருப்பம் இல்லை. மத்திய அரசின் அழுத்தத்தால் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறார். அவர் கவலைப்பட தேவையில்லை. அவரது துன்பங்களையும் நாங்கள் பொறுக்கி விடுவோம்.
உங்களை அன்றாடம் பாதிக்கும் விஷயங்கள் குறித்து அஞ்சு வரிகளில் ஒரு கடிதம் எழுதி பிரதமர், முதல்வர், கலெக்டர் என அனைவருக்கும் தினசரி தொடர்ந்து அனுப்புங்கள். நிச்சயமாக அதன் மூலம் மாற்றம் வரும்” என்றார்.