வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’!

Get real time updates directly on you device, subscribe now.

வில்லுப்பாட்டு கலை மூலம் மக்களிடையே தனித்த அடையாளம் பெற்ற கலைஞர், மாதவி. சமூக வலைதளங்களில் மாதவிக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. தென் தமிழ் நாட்டைப் பொருத்தவரையில் எந்த நிகழ்ச்சியானாலும் மாதவி பாட வருகிறார் என்று கூறினாலே அந்த திருவிழா களைகட்டுமளவுக்கு ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள். தன் வில்லிசைக் கலைக்காகவே பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார் மாதவி. நாட்டுப்புற இசை மற்றும் பாரம்பரியக் கலையை இளைய தலைமுறையினரிடமும் கொண்டு சேர்த்து வருபவர்.

தன்னுடைய தனித்துவமான குரலால் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள வில்லுப்பாட்டு மாதவி, தற்போது ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார். ஜிப்ரான் இசையில் அவர் பாடிய ‘சுடலைமாடன் வேட்டைப்பாடல்’ பாடல், சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

Related Posts
1 of 7

7 Miles Per Seconds Productions சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரித்துள்ள ‘வேட்ட சாமி’ திரைப்படத்தில், அருள்நிதி – அமீர் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் தமிழ், விஜி சந்திரசேகர், ‘ஆடுகளம்’ நரேன், அர்ஜெய், OAK சுந்தர், மதுசூதனன், மைனா நந்தினி, கவிதா பாரதி, நந்தினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வீரமும் தெய்வ நம்பிக்கையும் மண்ணின் அடையாளம் என்ற கதைக்கருவுடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தை, ‘பம்பர்’ திரைப்படத்தை இயக்கிய எம்.செல்வகுமார் இயக்கியுள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை ரூபன் மேற்கொண்டு வருகிறார். சண்டைக் காட்சிகளை, சிறுத்தை கணேஷ் வடிவமைத்துள்ளார்.

படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘வேட்ட சாமி’ திரைப்படத்தில் வில்லுப்பாட்டு மாதவி பாடியுள்ள தகவலை, மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார், இசையமைப்பாளர் ஜிப்ரான்.