ராம் கோபால் வர்மா மீது போலீசில் புகார் : ‘வங்கா வீதி’க்கு வந்தது சிக்கல்!

போகிற போக்கைப் பார்த்தால் ராம்கோபால் வர்மாவின் சகல உடல் உறுப்புகளையும் பெவிகுவிக் போட்டுத்தான் ஒட்ட வேண்டும் போலிருக்கிறது.
எடுக்கிற படங்கள் ஓடுகிறதோ? இல்லையோ? வாயை வைத்துக் கொண்டும் சும்மா இருப்பதில்லை. படம் எடுப்பதையும் விடுவதில்லை.
ஒவ்வொரு படத்துக்கு யாராவது ஒருவர் சிக்கி விடுகிறார். சரி அதை விடுங்கள். இப்போது ‘வங்கா வீதி’ என்ற படத்தை தெலுங்கும், ஹிந்தி என இருமொழிப்படமாக எடுத்திருக்கிறார் ராம் கோபால் வர்மா.
விஜயவாடாவைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ மற்றும் நிழல் உலக தாதா வங்காவீதி மோகன ராவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இந்தப்படத்தில் தான் ஐயப்ப சுவாமி பக்தர்களை தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும் ராம் கோபால் வர்மா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஐதராபாத் அருகே உள்ள குஷாய்குடா பகுதியைச் சேர்ந்த ஐயப்ப சுவாமி பக்தர்கள் சிலர், போலீசில் புகார் செய்துள்ளனர். வங்காவீதி படத்தில் ஐயப்பா சுவாமியின் பக்தர்கள் கொலை செய்வதாகக் காட்டப்படுவதாகவும், இது தவறு எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ராம் கோபால் வர்மாவின் இந்த வங்கா வீதிக்கு வீதிக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறதாம்.
சும்மாவே இருக்க மாட்டீங்களா வர்மா?