சர்ச்சையை கிளப்புமா? பொன்னியின் செல்வன் : ‘கார்ட்டூனிஸ்ட்’ மதன் போட்ட குண்டு
அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்லவன்’ நீண்ட வரலாற்று நாவலான இது, இப்போது 120 நிமிடங்கள் கொண்ட முழுநீள 2டி திரைப்படமாகி வருகிறது.
‘பொன்னியின் செல்லவன்’ கதை அனிமேஷன் படங்களின் அசத்தல் தன்மை யோடும் அசல் கதையின் ஓட்டம் மாறாமலும் தயாராகிறது. 5 எலிமெண்ட்ஸ் எண்டர்டெய்னர் மற்றும் வளமான தமிழகம் நிறுவனத்துடன் இணைந்து சரவணராஜா தயாரிக்கிறார். எம். கார்த்திகேயன் இயக்குகிறார். பி.லெனின் படத்தொகுப்பு செய்கிறார்.
இன்று நடந்த விழாவில் படத்தின் முன்னோட்டத்தை திரைப்பட இயக்குநர் எஸ்பி. ஜனநாதன் வெளியிட தமிழ்நாடு வேளாண்மைத் துறை இயக்குநர் ராஜேந்திரன் ஐ.ஏ:எஸ். பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சரவணராஜா “இங்கே வந்திருப்பவர்கள் கல்யாணமாலை மோகன், ராஜேந்திரன் ஐ.ஏ:எஸ்., பிரபல கார்ட்டூனிஸ்ட் மதன், திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் அனைவரும் அழைத்த போது காரணம் கேட்டனர். எல்லாருக்குமே உரிய தகுதியும் தொடர்பும் இருப்பதால் தான் அழைத்து இருக்கிறேன். அதற்கான காரணத்தை நான் கூறியதும் மகிழ்ச்சியுடன் வர ஒப்புக் கொண்டனர்.
இவர்கள் அனைவரும் திரைப்படம், அனிமேஷன், வரலாறு என்கிற வகையில் இவ்விழாவுடன் தொடர்பு உடையவர்கள் தான். இது மூன்றாண்டுகால திட்டம். 7 மாதங்கள் மட்டுமே முடிந்துள்ளது. மீதி 2 ஆண்டுகள் 4 மாதங்கள் உள்ளன. 2017ல் வெளிவரவுள்ள இத்திரைப்படம் டிஸ்னி ,Pixar நிறுவனத் தயாரிப்புகளுக்கு இணையாக சுமார் 20 கோடி தயாரிப்பு செலவில் உருவாகிறது. .அனிமேஷன் படக்குழுவில் 150 பேர் பணிபுரிகிறார்கள் ‘பொன்னியின் செல்வன்’ அனிமேஷன் படம் திரைப்படத்துறையில் புதிய பரிமாணத்தை உருவாக்கும் என்று நம்புகிறோம்
இதன் தரம் பற்றிய பலருக்கும் சந்தேகங்கள் வரலாம். வரும்; அதற்கு பதில் அளிப்பது போல தரத்தைக் காட்ட அவ்வப்போது இன்னும் 2,.3 முன்னோட்டத்தை வெளியிடவுள்ளோம்.” என்றார்.
விழாவில் திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பேசும்போது :
“இந்த அனிமேஷன் முயற்சி வரலாற்றில் முக்கிய நிகழ்வு. இது சாதாரண விஷயமல்ல. எம்.ஜி.ஆரே இதை எடுக்க விரும்பியிருக்கிறார்.
நானும் ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அனிமேஷன் என்று ஈடுபட்டு பைத்தியமாகத் திரிந்தவன்தான்.
சோழர்கால வரலாறு மிகப்பெரியது. பேராசிரியர் ஞானசம்பந்தன் ஒரு தகவலைக் கூறினார் ஆச்சரியப்பட்டேன். சோழர் களின் கப்பல்படை பெரியது. இப்போதாவது திசைகாட்ட கருவி உள்ளது. அப்போது திசையை அறிய தேவாங்கை பயன்படுத்தினார்களாம்.
அது எப்போதும் மேற்கு நோக்கியே பார்க்குமாம். பிறந்த குட்டியும்கூட மேற்கு நோக்கியே பார்க்குமாம் அதை வளர்த்து கப்பலில் பயன்படுத்தியிருக்கிறார்கள். என்ன ஒரு விஞ்ஞான நுணுக்கம் பாருங்கள். இந்த முயற்சியில் என்னால் முடிந்த உதவியை செய்யத் தயாராக இருக்கிறேன்.”என்றார்.
அடுத்து பிரபல கார்ட்டூனிஸ்டும் எழுத்தாளருமான மதன் பேசும்போது
”படம் எடுப்பதே சவால். அதையும் ‘பொன்னியின் செல்வனை’அனிமேஷன் படமாக பிரமாண்டமாக எடுப்பது அதைவிட பெரிய சவால். இது எல்லாமே மிகப்பெரிய விஷயம்.
அதனால் இதைத் தயாரிக்கும் சரவணராஜா வந்தியத்வேனை விட பெரிய வீரனாகத் தெரிகிறார். சுமார் 2500 பக்கங்கள் கொண்ட இக்கதையை 10முறை படித்தவர்களே பல ஆயிரம் பேர் இருப்பார்கள். அவர்கள் எல்லாருமே அத்தாரிடி போல் பேசுவார்கள்
இம்முயற்சி காலத்தின் கட்டாயம். எவரெஸ்ட்டில் ஏறிய எட்மண்ட் ஹிலாரியிடம் ஏன் ஏறினே என்றபோது சிகரம் இருந்தது ஏறினேன் என்றாராம். அது காலத்தின் கட்டாயம்.3டிஎன்பது சிக்கல் நிறைந்தது. ஆனால் 2டி பல வசதிகள் கொண்டது. ஸ்பீல்பெர்க் ‘டின்டின்’ எடுத்தபோது 3டி பற்றி கேள்வி வந்தது. பெரிய ஹிட்டான லயன்கிங், ஜங்கிள்புக் எல்லாம் 2டி யில்பார்த்து இருப்பார்கள்.
இன்னொரு தலைமுறைக்கு கொண்டு செல்லும் இம்முயற்சி சாகாவரம் பெறப் போகிறது. இதில் வரும் ஆழ்வார்க் கடியான் பாத்திரத்தில் உள்ள நாமம் வடகலையா? தென்கலையா? என்கிற சர்ச்சையை உண்டாக்கும். அதற்காகத் தமிழகத்தில் கலவரமே நடக்கப் போகிறது. ஏற்கெனவே காஞ்சிபுரம் கோவில் யானைக்கு நாமம் போடும்போது வடகலையா? தென்கலையா? சர்ச்சையாகி நீதிமன்றமே போனார்கள். இது பெரிய வேலை தஞ்சைப் பெரிய கோவில் கட்டியதைப் போல பெரிய வேலை ,கட்டி முடிக்க வேண்டும்.” என்று கூறி வாழ்த்தினார்.