ரஜினியை ‘ஹாஸ்டல் வார்டன்’ ஆக்கிய கார்த்திக் சுப்பாராஜ்!
‘காலா’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதுப்படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.
முன்னதாக ‘எந்திரன் 2’ படம் ரிலீசான பிறகு தான் இந்தப்படம் ரிலீசாகும் என்று ரஜினி தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால் ‘காலா’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனால் அடுத்த படத்தை உடனே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று விரும்பிய ரஜினி ‘எந்திரன் 2’ ரிலீஸ் தள்ளித் தள்ளிப் போவதால் கார்த்திக் சுப்பாராஜ் படத்தை விரைவாக ரிலீஸ் செய்ய உத்தரவு போட்டிருக்கிறார்.
அவர் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு படப்பிடிப்பை வேகமாக நடத்தி வருகிறார் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ்.
படத்தில் ரஜினிக்கு ஜோடியாக 20 வருடங்கள் கழித்து நடிக்கிறார் சிம்ரன். இவர்களுடன் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனத் ரெட்டி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.
இதற்கிடையே படத்தில் ரஜினியின் கேரக்டர் எந்த மாதிரியான கேரக்டர்? என்பது குறித்த ரகசியம் கசிந்திருக்கிறது.
ஊட்டி மற்றும் மதுரை தான் கதைக்களமாம், ஊட்டியில் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்கள் பாபி சிம்ஹாவும் சனத் ஷெட்டியும். அந்த கல்லூரிக்கு சொந்தமான ஹாஸ்டலில் கண்டிப்பான வார்டன் கேரக்டரில் நடிக்கிறாராம் ரஜினி.
‘கபாலி’, ‘காலா’ படங்களில் வயதான கேரக்டர்களில் ரஜினியைப் பார்த்த ரசிகர்கள் இந்தப் படத்தில் அவரை இளமையாகப் பார்க்க ஆசைப்பட்டார்கள். ஆனால் தன் வயசுக்கேற்ற கேரக்டர்களில் மட்டுமே இனி படங்களில் நடிப்பது என்கிற முடிவுக்கு ரஜினி வந்ததால் இந்தப் படத்தில் வயதான வார்டன் கேரக்டரில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் ரஜினி.
ஊட்டியிலேயே எடுத்தால் ரசிகர்கள் தொந்தரவு அதிகம் இருக்கும் என்று நினைத்ததால் டார்ஜிலிங் உள்ளிட்ட மலைப்பிரதேசப் பகுதிகளில் ஊட்டி சம்பந்தபட்ட காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.
நவம்பர் 27-ம் தேதி ரிலீசாக இருக்கும் ‘எந்திரன் 2’ படத்துக்கு முன்பாக இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.