விஜய் சாருக்கு நன்றி – நடிகர் சத்யா என்.ஜே!

Get real time updates directly on you device, subscribe now.

மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் மணி சேகர் இயக்கி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் வினோத், நிஷாந்த், சத்யா என்.ஜே., யாஷின், நடிகைகள் திவ்யா துரைசாமி, ஹேமா இயக்குனர் மணி சேகர், தயாரிப்பாளர் மலர்கொடி மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இவ்விழாவில் நடிகர் சத்யா என்.ஜே. பேசும்போது,

‘இந்த படம் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வரும் ஸ்னூக்கர் படம். நான் கிரிக்கெட் விளையாடுபவன், ஸ்னூக்கர் பற்றிய முழு படமாக ஆர்வமாக பார்க்க முடியுமா? என்று நினைத்திருந்தேன். ஆனால், இயக்குனர் மிக அழகாக எடுத்திருக்கிறார். ஒரு ஏரியாவில் 5 நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை சுற்றி நகரும் கதை. நம் எல்லோரையும் தொடர்புபடுத்திக் கொள்ளும் படமாக இருக்கும். தொழில்நுட்ப கலைஞனராக 13 வருடங்கள் இந்த துறையில் இருந்திருக்கிறேன். அதற்கு காரணம் உங்களுடைய ஆதரவு தான்.

முக்கியமாக இப்படத்தின் தயாரிப்பாளருக்கு நன்றி கூற வேண்டும். தயாரிப்பாளரின் மகன் நிஷாந்த் ஐவரில் ஒருவராக நடித்திருக்கிறார். ஆனால், என்னுடைய பையனுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும், தனிப் பாடல், சண்டைக் காட்சிகள் இருக்க வேண்டும் என்று கூறாமல் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறினார். நிஷாந்தும் எங்கள் ஐவரில் ஒருவராகவே பழகினார்.

விஜய் சாருக்கு ஒரு படம் எடுக்க வேண்டும் என்று தான் இந்த துறைக்கு வந்தேன். தெறி படத்தின் வெற்றிவிழாவில், நீ நடிக்க வேண்டும் என்று தானே இந்த துறைக்கு வந்தாய்? என்று விஜய் சார் என்னிடம் கேட்டார். என்னை நடிகனாக அங்கீகரித்து நடிக்க போ, என்று முதலில் கூறியது விஜய் சார் தான். அவர் கூறிய வார்த்தை தான் எனக்குள் ஏதோ இருக்கிறது என்று நடிக்கத் தூண்டியது. ஆகையால், விஜய் சாருக்கு இந்த நேரத்தில் நன்றி கூறுகிறேன். இந்த சமயத்தில் லோகேஷ் கனகராஜ் சாரிடம், இந்த தோற்றத்திற்கு ஏற்ற கதாபாத்திரம் இருந்தால் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

#Sanjeevan #சஞ்ஜீவன்