என்னது… ‘சிவா மனசுல புஷ்பா’வா? : அரசியல் சர்ச்சைகளை கிளப்ப வரும் வாராகி!

நடிகர் சங்க விவகாரத்தில் விஷாலுக்கு எதிராக முஷ்டியை முறுக்கிய வாராகியை நினைவிருக்கிறதா?
அந்த பரபரப்புக்குச் சொந்தக்காரர் இப்போது ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் அவதாரமெடுத்து ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை எடுப்பதில் முழு மூச்சாக இறங்கியிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிலுள்ள எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்பி ஒருவரின் அந்தரங்க புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்தப் புகைப்படங்களில் ஒன்றைப் போலவே இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் துணிச்சலாக வடிவமைத்திருக்கிறார். அந்த முதல் தோற்றப் போஸ்டர்களை வெளியீடும் நிகழ்ச்சி நேற்று சென்னை, தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே அலுவலகத்தில் நடைபெற்றது.
படத்தின் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே ரித்திஷ் வெளியிட, அதை தயாரிப்பாளர் ஜே எஸ் கே பெற்றுக் கொண்டார். தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
போஸ்டரைப் பார்த்ததும் அந்தக் கேள்வி வருமென்று வாராகியே நினைத்தாரோ என்னவோ அவரே பதிலைச் சொன்னார்… “பல அரசியல் சர்ச்சைகளை நிச்சயம் இப்படம் உருவாக்கும். மூன்று நாயகர்களிடம் இக்கதையை கொண்டு சென்றேன். யாரும் இதில் துணிந்து நடிக்க மறுத்தார்கள். அதனால் தான் நானே இந்தப் படத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு அரசியல்வாதி என்றாலே நல்லவனாக இருக்க வேண்டும் இப்போதைய காலகட்டத்தில் அப்படி ஒருவரை பார்ப்பது அரிதாகிறது. இப்படத்தில் நாயகன் ஒரு பிரபல கட்சியின் உறுப்பினராகவும், நாயகி எதிர்க்கட்சியின் உறுப்பினராகவும் வருகிறார்கள். இன்னும் இரண்டு மாதத்தில் இப்படத்தினை திரைக்கு கொண்டு வர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார் வாராகி.
கலகங்கள் குமுறாமல் இருந்தால் சரிதான்!