நடிகர் செளந்தரராஜாவுடன் தமன்னாவுக்கு நிச்சயதார்த்தம்! – மே மாதம் மதுரையில் டும் டும் டும்!

‘சுந்தர பாண்டியன்’ படத்தின் மூலமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சௌந்தரராஜா.
அந்த படத்திற்குப் பின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ஜிகர்தண்டா’, ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’, ‘தங்க ரதம்’, ‘தர்மதுரை’, ‘ஒரு கனவு போல’, ‘திருட்டுப்பயலே 2’ உள்பட பல படங்களில் நடித்தார். இப்போது ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’, ‘ஈடிலி’, ‘கடைக்குட்டி சிங்கம்’ படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நடிகராக மட்டுமில்லாது, மனிதநேயம் மிக்கவராகவும் தொடர்ந்து செயல்படுபவர் சௌந்தரராஜா. ஜல்லிக்கட்டு போராட்டம், மரக்கன்றுகள் நடுதல், கருவேல மரங்கள் அழித்தல் என சமூக சேவைகள் தொடர்ந்து செய்து வருபவர். இயக்குநர்கள் சமுத்திரக்கனி, சசிக்குமார், எஸ்.ஆர்.பிரபாகரன், சீனு ராமசாமி, நடிகர்கள் விஜய் சேதுபதி, விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரின் அன்புக்கு சொந்தக்காரரான சௌந்ததராஜா இப்போது புதுமாப்பிள்ளையாகி விட்டார்.
”க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட்” நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இருக்கும் இளம் பெண் தொழிலதிபர் , தமன்னாவை திருமணம் செய்ய இருக்கிறார் சௌந்தரராஜா.
செளந்தரராஜா – தமன்னா திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. மே மாதம் மதுரை, உசிலம்பட்டியில் சொந்த பந்தங்கள், நண்பர்கள், சினிமா பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளது.