தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் கனவை நனவாக்கிய சூர்யா!
நோயை எதிர்கொள்ள நம்பிக்கை அவசியம். அப்படி நம்பிக்கையோடு தசை சிதைவு நோயை எதிர்கொண்டு வரும் சிறுவன் தினேஷின் கனவை நனவாக்கியிருக்கிறார் சூர்யா.
வரைகலையிலும் நிபுணத்துவம் பெற்ற தேனியை சேர்ந்த சிறுவனான தினேஷுக்கு நடிகர் சூர்யாவை சந்தித்து பேச வேண்டும் என்பது அவரின் ஆசை.
இதை தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில் சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார். இதை அறிந்த சூர்யா நற்பணி மன்ற நிர்வாகிகள் தினேஷை அழைத்து வந்து (நேற்று செப்டம்பர் 19ம் தேதி) சென்னையில் சூர்யாவை சந்திக்க வைத்தனர்.
அப்போது சூர்யாவுடனிருந்த சூர்யாவின் தந்தை சிவகுமார் மற்றும் சகோதரர் கார்த்தி ஆகியோரும் அவரை சந்தித்து பேசினர்.
அப்போது சிறுவனிடம் பேசிய சூர்யா ”நீங்கள் உள் நெஞ்சத்திலிருந்து என்ன நினைக்கிறீர்களோ, நம்புகிறீர்களோ அல்லது கனவு காண்கிறீர்களோ அது கண்டிப்பாக நினைவாகும். பெரிதாக கனவு காணுங்கள் ஒரு போதும் கனவு காண்பதை நிறுத்தாதீர்கள்” என்று பாராட்டினார்.