‘தளபதி 62’ – கிளாப்போர்டு அடித்து படப்பிடிப்பை ஆரம்பித்த விஜய்!
‘மெர்சல்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து விஜய் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையேயும் ஆவல் ஏற்பட்டது.
தொடர்ந்து விஜய்யின் 62வது படம் குறித்து சில தகவல்கள் வந்தாலும் விஜய்யின் அடுத்த படத்தை நான் தான் இயக்கப் போகிறேன் என்று சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். காரணம் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி என விஜய்யுடன் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். இதனாலேயே இந்த காம்பினேஷன் விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தியாகி விட்டது.
இதற்கிடையே இந்தப் படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பைரவா படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.
விஜய் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னையை அடுத்த பனையூரில் ஆரம்பமானது. நடிகர் விஜய் கிளாப் அடித்து படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து அங்கு இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. பின்னர் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இப்படத்துக்கு கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். கலையை சந்தானம் மேற்கொள்கிறார். படம் வருகிற தீபாவளி விருந்தாக வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.