ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’!

Get real time updates directly on you device, subscribe now.

வம்சி இயக்கத்தில் தயாராகும் புதிய பான் இந்திய திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த திரைப்படத்தில் ‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா கதையின் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். 1970களில் ஸ்டூவர்ட் புரம் எனும் பகுதியில் வாழ்ந்த பிரபல திருடனின் வாழ்க்கை வரலாறை தழுவி தயாராகும் இந்த திரைப்படத்தை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதும் இந்த திரைப்படத்திற்கு அவினாஷ் கொல்லா நிர்வாக தயாரிப்பாளராகவும், மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இந்த ஆண்டில் வெளியான பிரம்மாண்டமான பட்ஜெட் திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக 5 ஏக்கர் நிலத்தில் ஸ்டுவர்ட்புரம் எனும் கிராமத்தை உருவாக்கி இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கிராமத்தில் படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்கியிருக்கிறார்கள். இதில் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பங்கேற்கும் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படுகிறது.

டைகர் நாகேஸ்வரராவ் படத்தின் டைட்டில் லுக் மற்றும் ஃப்ரீ லுக் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இறுதிக் கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருக்கும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.