‘வாழ்க விவசாயி’ படக்குழுவினரை மனதாரப் பாராட்டிய இயக்குநர் சசிகுமார்!
விவசாயத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் ‘வாழ்க விவசாயி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் இயக்குநர் சசிகுமார் வெளியிட்டார் . இந்நிகழ்வுக்காகத் தான் மகிழ்ச்சியடைவதாகக் கூறிய அவர், ‘வாழ்க விவசாயி ‘படக்குழுவினரை வாழ்த்தினார் .
நீரின்றி ,உணவின்றி ,தொழில் இல்லாததால் வாழ்வாதாரத்துக்கு வழியின்றி தவிக்கும் விவசாயிகள் பிரச்சினையை மையப் பின்னணியாக வைத்து உருவாகியுள்ள படம் ‘வாழ்க விவசாயி’. இப்படத்தை புதுமுக இயக்குநர் பி.எல் பொன்னி மோகன் இயக்கியுள்ளார். கதிர் பிலிம்ஸ் சார்பில் பால் டிப்போ கதிரேசன் தயாரித்துள்ளார்.
“வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார்களின் கதை இது” என்கிற இயக்குநர், “இது சமீப காலமாக விவசாயிகள் படும் துன்பத்தையும் துயரத்தையும் அவலத்தையும் படம் பிடித்துக் காட்டும்” என்கிறார்.
இப்படத்தில தேசிய விருது பெற்ற நடிகர் அப்புக்குட்டி, வசுந்தரா, முத்துராமன், “ஹலோ”கந்தசாமி, ஸ்ரீகல்கி, “மதுரை” சரோஜா அம்மாள், திலீபன், குழந்தை நட்சத்திரங்கள் வினோத், சந்தியா, ஆனந்த ரூபிணி கவிஞர் விக்கிரமாதித்யன், விஜயன், ஆகியோர் நடித்துள்ளனர்.
இதன் படப்பிடிப்பு இராஜபாளையம், சொக்கம்பட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார விவசாய கிராமங்களில் நடைபெற்றுள்ளது. படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.