மாணவியின் கல்விக் கட்டணத்தை ஏற்றுக் கொண்ட விஜய் ரசிகர்கள் : குவிகிறது பாராட்டுகள்…

சில தினங்களுக்கு முன்பு அரியலூர் மாணவி அனிதாவின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லி விட்டு வந்தார் நடிகர் விஜய். அவருடைய அந்த செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்தது.
அதற்கடுத்த நாளே அதே அரியலூரைச் சேர்ந்த மாணவி ரங்கீலா என்பவருக்கு ஆயுர்வேதம் படிப்பு படிக்க நிதியுதவி செய்வதாகச் சொல்லி அரியலூர் விஜய் மக்கள் மன்றத்தைச் சேர்ந்த ஒருவர் ஏமாற்றி விட்டதாக ஊடகங்களில் பரபரப்பு செய்தி வெளியானது.

அதற்கு விஜய் நற்பணி இயக்கம் சார்பில் மாணவிக்கு உதவி செய்வதாக உறுதி கொடுத்தவர் பற்றி மன்றத்தில் இருப்பவர்களுக்கு தெரியவே தெரியாது என்று மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் மாணவி ரங்கீலா படிப்பைத் தொடரும் பொருட்டு அவர் படிக்கும் கல்லூரியான மரியா ஆயூர்வேத மருத்துவக் கல்லூரியில் 1.5 லட்சம் ரூபாயை கட்டணமாக கட்டியிருப்பதாக அவர்கள் கொடுத்த செக் லீப் உடன் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட ஒருவர் விஜய் பெயரைச் சொல்லி மாணவிக்குக் கொடுத்த பொய்யான வாக்குறுதியை நிறைவேற்றியதோடு, அந்தப் பிரச்சனையிலிருந்து விலகிச் செல்லாமல் அவர் மேற்படிப்பைத் தொடர உதவி செய்த விஜய் ரசிகர்களுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.