‘ஆடி’ மாசத்துல கல்யாணம்! : எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருங்க…
நிலா பிரமோட்டர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் துரை சுதாகர் தயாரிப்பில் எஸ்.எம்., கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘ஆடி’.
துரை சுதாகர், டோனா, கோவை ஜெயக்குமார் பேனா மணி மற்றும் பலர் நடிக்கும் இப்படத்திற்கு பழனி பாலு இசையமைக்கிறார்.
பலரும் திருமணம் நடத்த மறுக்கும் ‘ஆடி’ மாதத்தில் நாயகனுக்கும், நாயகிக்கும் திருமணம் நடக்கிறது. அதனால் அவர்கள் வாழ்க்கையில் ஆனந்தம் ஆடி வந்ததா, அல்லது பிரச்சனை தேடி வந்ததா என்பதுதான் இப்படத்தின் கதை.
நாயகன் ஒரு தப்பாட்டக் கலைஞன். நாயகி அவனது சொந்த அக்கா மகள். தப்பாட்டம் ஆடினாலும் மிகச் சரியாக அக்கா மகள் மீது காதல் கொண்டு வாழ்கிறான் நாயகன். ஊர் பண்ணையாரின் மகன் ஒரு காமாந்தகன். பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கையில் வீழ்த்தும் குணம் உள்ளவன் .
தனது காமப் பார்வையை நாயகி மீதும் அவன் செலுத்த, பொங்கி எழுந்த நாயகி அந்த அயோக்கியனை எச்சரித்து விரட்டுகிறாள்.
முள் மீது சேலை விழாவிட்டால் கூட, முள் செடி பக்கம் போன சேலை எப்படியும் கிழிந்து இருக்கும் என்று எண்ணும் உலகை எண்ணி பயப்படுகிறாள் நாயகியின் தாய் “நடந்த சம்பவத்தை உன் மாமனிடம் கூட சொல்லாதே . நடக்காத சம்பவத்துக்கு ஒரு சத்தியம் வாங்குகிறாள் தாய். அதோடு, பிரச்சனை பெரிதாவதற்குள் திருமணத்தை நடத்த விரும்பி, யாரும் திருமணம் நடத்த விரும்பாத ஆடி மாதத்தில் திருமணம் செய்து வைக்கிறாள். ஆனால் ஆடி வேலையை காட்டியதோ இல்லையோ ஆட்கள் வேலையைக் காட்டுகிறார்கள்.
வீண் ஜம்பத்துக்காக வில்லன், ”நான் எப்போதோ நாயகியை அனுபவித்து விட்டேன் என்று கூற, அதை நம்பிய நாயகன் மனைவியான நாயகியிடம் கேட்கிறான். தவறு ஏதும் நடக்கவில்லை என்று தெரிந்து கொண்டு நாயகன் கேட்பதாக எண்ணும் நாயகி , ”அம்மா சத்தியம் வாங்கியதால் தான் சொல்லவில்லை” என்று கூறுகிறாள்.
நாயகி கெட்டுப் போனதாக எண்ணும் நாயகன் மனைவியை வார்த்தைகளால் காயப்படுத்த, மனம் நொறுங்கும் நாயகிக்கு, அப்புறம் என்ன ஆனது, துன்பம் தொடரும் அவள் வாழ்வில், ஆனந்தம் ஆடி வந்ததா என்பதை இந்த ‘ஆடி’ படத்தில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாக்கி வருகிறார்கள்.