சினிமா உசுரோட இருக்கணும்னா பட்ஜெட் படங்கள் தான் நல்லது! : எச்சரித்த தியேட்டர் அதிபர்

பேய்க்கும் பாம்புக்கும் மோதல் கொண்ட படமாக உருவாகியுள்ளது ‘விடாயுதம்’. நாயகன் ராம் சரவணன், நாயகி ஆஸ்கார் விருது பெற்ற படமான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ புகழ் தன்வி லங்கோர்.
நாகமானிசி இயக்கியுள்ள இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் நேற்று மாலை சென்னையிலுள்ள ஆர்.கே.வி ஸ்டுடியோவில் நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் பேசும் போது,
“ஜாதி, மத, இன, மொழி, ஏழை, பணக்காரன் என்கிற வேறுபாடு இல்லாத உலகம் திரைப்படக் கலையுலகம் தான். இந்த சினிமா உயிருடன் இருப்பது சிறு முதலீட்டுப் படங்களால்தான். சினிமா. உயிருடன் நன்றாக இருக்க சிறிய படங்கள் நிறைய வர வேண்டும்.
.’விடாயுதம்’ படத்தைச் சிறு முதலீட்டுப் படமாக நாகமானிசி எடுத்திருக்கிறார். ‘விடாயுதம்’ ஒரு பாம்புப்படம். நான் பாம்புப் படம் பார்க்க மாட்டேன். பயப்படுவேன்.
சிறு முதலீட்டுப் படங்கள் வெளியானால் தான் சினிமா நன்றாக இருக்கும். தியேட்டர்களில் அதிகம் வெளிவருபவை சிறு முதலீட்டுப் படங்கள் தான். அது மட்டுமல்ல சினிமாவை நம்பித்தான் டிவிக்கள் உள்ளன. டிவி க்களில் 90 சதவிகிதம் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் தான் வருகின்றன. சினிமாவை நம்பி பத்து லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லாரும் நன்றாக இருக்க நிறைய சிறு முதலீட்டுப் படங்கள் வரவேண்டும் இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்.
விழா மேடையில் நிஜமான நல்லபாம்பு மேடை அரங்க அமைப்பில் இடம் பெற்றிருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.