தயாரிப்பாளர் ஆனார் சிவாஜி பேரன்! : ஆசி வழங்கினார் ரஜினிகாந்த்

‘சக்சஸ்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பேரன்களில் ஒருவரும் ராம்குமாரின் மகனுமான துஷ்யந்த்.
டைட்டிலில் இருந்த ‘சக்சஸ்’ நடித்த சில படங்களில் கிடைக்காததால் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.
பிறகு திருமணம், குடும்பம் என்றிருந்த துஷ்யந்த் இப்போது ஈஷான் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி தயாரிப்பாளராகியிருக்கிறார்.
இந்த நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் படத்துக்கு ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்று வித்தியாசமான டைட்டில் வைத்திருக்கிறார்கள்.
பிரபு, காளிதாஸ் ஜெயராமன், ஆஷ்னா சாவேரி,எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தை கதை எழுதி இயக்குகிறார் அமுதேஷ்வர், டி.இமான் ஒளிப்பதிவு செய்ய லஷ்மணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஈஷான் புரொடக்ஷன்ஸ் சார்பில் துஷ்யந்தும், அபிராமி துஷ்யந்தும் தயாரிக்கிறார்கள்.
புதுமுக நடிகர்களையும், தொழில்நுட்பக் கலைஞர்களையும் ஊக்கப்படுத்தும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படும் என்று தெரிவித்திருக்கும் தயாரிப்பாளர் துஷ்யந்த் சென்ற வாரம் படப்பிடிப்புக்காக மலேசியா சென்றிருந்த போது அங்கு ‘கபாலி’ படப்பிடிப்பில் இருந்த ரஜினிகாந்த்தை நேரில் சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார்.
படத்தின் டைட்டிலைக் கேட்டதும் சந்தோஷப்பட்ட ரஜினிகாந்த் ”நிச்சயம் இந்தப்படம் ஹிட்டாகும் என்று ஆசி வழங்கினாராம். மேலும் சிவாஜி புரொடக்ஷன்ஸ் போலவே இந்த நிறுவனமும் பல படங்களைத் தயாரித்து மென்மேலும் வளர வேண்டும்” என்றும் வாழ்த்தியிருக்கிறார்.
நடிகர் திலகத்தின் வாரிசுவை நாமும் வாழ்த்துவோம்…