ஒரே நாளில் ஹீரோயின் ஆனேன்! : பிரசாந்த் படத்தில் சஞ்சிதா ஷெட்டிக்கு கிடைத்த புது அனுபவம்

‘சாகசம்’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனது மகனும் ஹீரோவுமான பிரசாந்த்தை வைத்து ஜானி படத்தை தனது ஸ்டார் மூவிஸ் சார்பில் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார் தியாகராஜன்.
இப்படத்தில் பிரஷாந்துக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, இதுவரை அவர் நடித்த படங்களில் ஏற்று நடித்திராத ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல், இதுவரை காமெடியாக நடித்து வந்த தேவதர்ஷினியும் இப்படத்தில் ஒரு மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், கலைராணி, ஆத்மா, ஜெயக்குமார், டிவி புகழ் சந்தியா, சங்கர் கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணமோகன், சுகந்தன், சுலைமா சேகர், ஆனந்தராஜ் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
தொடர்ந்து 77 நாட்களாக படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள ‘ஜானி’க்கு இன்னும் பாடல் காட்சிகள் மட்டும் தான் பாக்கி. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் பாடல் காட்சிகளை கனடா மற்றும் மொரிஷீயஸ் ஆகிய நாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ப.வெற்றிச்செல்வன், ஜீவா சங்கரிடம் இணை இயக்குநராக பணியாற்றியவர் ஆவார்.
இப்படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர். அவர்கள் யார்? என்பதை சஸ்பென்ஸாக வைத்துள்ள படக்குழுவினர், இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் அவர்களை அறிமுகப்படுத்த உள்ளனர்.
ஜானி திரைப்பட அறிமுக விழாவில் பிரசாந்த், தியாகராஜன், பிரபு, ஆனந்தராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலந்து கொண்ட நடிகை சஞ்சிதா ஷெட்டி இப்படத்தில் ஒப்பந்தமான சுவாரஷ்யத் தகவலை பகிர்ந்து கொண்டார்…
வழக்கமாக ஒரு படத்தில் ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய வேண்டுமென்றால் 15 நாட்களுக்கு முன்பாகவே அவர்களை நேரில் வரச்சொல்லி, சம்பளம் பேசி அக்ரிமெண்ட்டெல்லாம் போட்டு ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் இந்தப் படத்தில் எனக்கு ஒரு புது அனுபவம் ஏற்பட்டது.
நாளை படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது என்றால் அதற்கு முந்தைய நாள் அதாவது ஒரு நாளைக்கு முன்பு தான் என்னை தியாகராஜன் சார் தொடர்பு கொண்டு பேசினார். உடனே கிளம்பி வாருங்கள் என்றார். வந்ததும் உடனே பேசி எல்லா விஷயங்களையும் ஓ.கே செய்து ஒரே நாள் இரவில் என்னை இந்தப் படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தார்கள். அடுத்த நாள் படப்பிடிப்புக்கு சென்றேன். இது நிஜமாகவே எனக்கு புதுமையாக இருந்தது. பிரசாந்த் உள்ளிட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட எல்லோரிடமும் நடிப்பு சம்பந்தமாக நான் நிறைய கற்றுக் கொண்டேன்.
இந்தப் படத்தில் என்னுடைய கேரக்டர் வெறுமனே காதல், டூயட் என்றில்லாமல் ஒரு போல்ட்டான கேரக்டராக எனக்கும் பிரசாந்த்துக்கும் சரிசமமான பேசப்படும்படும் கேரக்டராக இருக்கும். ” என்றார்.
பின்னர் பேசிய தியாகராஜன் , “இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் எல்லோருமே, இதுவரை அவர்கள் முந்தைய படங்களில் ஏற்று நடித்திராத வித்தியாசமான கேரக்டரில் நடித்திருப்பது தான் இப்படத்தின் தனி சிறப்பு. அது மட்டுமில்லாமல் படத்தை நவீன தொழில்நுட்பங்களோடும் பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறோம்” என்றார்.