‘சாதி’யால் சர்ச்சை? : ஃபேஸ்புக்கை விட்டு வெளியேறினார் நடிகர் சிவக்குமார்!
பிரபல நடிகரும், நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் அப்பாவுமான சிவக்குமார் தன்னுடைய பேஸ்புக் அக்கவுண்ட்டில் சினிமா, கலை, யோகா, வரலாறு என பலதரப்பட்ட விஷயங்களைக் குறித்து ஆழமான பதிவுகளை எழுதி வந்தார்.
அதில் சமீபத்தில் தீரன் சின்னமலை பற்றியும் ஒரு பதிவை எழுதியிருந்தார். அந்தப்பதிவைப் படித்த பலர் அவரது முகநூலில் சாதி பற்றிய கருத்துக்களை பரிமாறியதோடு நிற்காமல், ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் வகையிலான வார்த்தைகளையும் வெளியிட்டார்கள். தான் எழுதிய ஒரு பதிவு பெருத்த சர்ச்சையை ஏறபடுத்திய நிலையில் இனி நான் ஃபேஸ்புக்கில் எதுவுமே எழுதப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது :
”என்றுமே என்னை மனிதப் புனிதன்
என்றோ – வழிகாட்டும் தலைவன்
என்றோ – வாரி வழங்கும் வள்ளல்
என்றோ – பேரறிவாளன் என்றோ –
நடிப்புக் கலை – ஓவியக்கலையில்
கரை கண்டவன் என்றோ – பெரிய சாதனையாளன் என்றோ நினைத்துக் கொண்டு நான் முகநூலில் பதிவிடவில்லை.
70 வயது தாண்டி , முடிந்தவரை நேர்மையாக, இந்த மண்ணில் வாழ்ந்து பெற்ற அனுபவங்களை, தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளவே எழுதி வந்தேன்.
இது சிலருக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் வன்மத்தை – சாதி வெறியை – வளர்த்துக்கொள்ள காரணமாக இருக்கிறது என்று அறிந்து வருந்துகிறேன் .
தனிப்பட்ட முறையில் என்னைத் தாக்கவும், குடும்பத்தினரைக் குறை கூறவும் , நானே களம் அமைத்துக் கொடுத்ததாக உணர்கிறேன்.
என் உலகம் சிறியது, அதில்
என் வாழ்க்கை மிகவும் எளிமையானது
இது உங்கள் உலகம் !
உங்கள் சுதந்திரம் !!
நீங்கள் நினைத்தபடி வாழுங்கள் !!!
எல்லோரும் இன்புற்றிருக்கவே இத்துடன் என் முகநூல் பதிவுகளை நிறைவு செய்கிறேன்” என்று சிவகுமார் கூறியுள்ளார்.