20 சதவீத பணக்காரர்களுக்காக 80 சதவீத மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்! : விஜய் வருத்தம்
எடுத்த எடுப்பிலேயே பிரதமரின் நடவடிக்கையை வரவேற்பு பாராட்டுவது ஒரு புத்திசாலித்தனம் என்றால் கொஞ்சம் காத்திருந்து அவர்களுக்கு என்ன மாதிரியான எதிர் வினைகள் வருகின்றன என்பதை பார்த்து விட்டு கருத்து சொல்வது இன்னொரு வகை புத்திசாலித்தனம்.
இதோ விஜய்யின் லேட் பிக்கப் புத்திசாலித்தனம் இன்று வெளிப்பட்டிருக்கிறது.
ரஜினி, கமல், தனுஷ் என தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் பலரும் எடுத்த எடுப்பிலேயே 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ததற்கு பிரதமர் மோடியை பாராட்டி தள்ளி விட்டார்கள்.
அதற்கான எதிர்வினைகளை இன்றுவரை சாதாரண மக்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஒருபுறமிருக்க திடீரென்று தன் தரப்பு கருத்தையும் தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய்.
இன்று காலை சென்னை வடபழனியில் நிருபர்களை சந்தித்த அவர் பேசியதாவது
”500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்துள்ள மத்திய அரசின் இந்த முடிவு நல்ல முடிவு. இது நிச்சயமாக நம் நாட்டிற்கு தேவையான, யாரும் யோசிக்க முடியாத, துணிச்சலான முடிவு. இது கண்டிப்பாக நாட்டின் வளர்ச்சியை முன்னேற்றும் என்பது உறுதி.
ஆனால் இந்த பாதிப்புகள் அதிகமாகியிருக்கக் கூடாது என்று தோன்றுகிறது. சிறு தொழில் செய்யும் வியாபாரிகள், முதியவர்கள் பலரும் இதனால் பாதிப்படைந்து வருகின்றனர். செய்திகளில் பல விஷயங்களை பார்த்து வருகிறேன். மனதுக்கு வருத்தமாக இருக்கிறது.
இந்த முடிவை மத்திய அரசு எடுப்பதற்கு முன்பு, பின் விளைவுகள் குறித்தும் யோசித்திருக்கலாம். தன் நிலத்தை விற்று தன்னுடைய பேத்தியின் திருமணத்துக்கு சில லட்சங்கள் ரூபாயை கொண்டு வந்த ஒரு பாட்டி அது செல்லாது என்று அரசாங்கம் சொல்லவும் அதிர்ச்சியடைந்து தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். மருத்துவமனையில் பணம் வாங்காததால் பச்சிளம் குழந்தை ஒன்றுக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்து போயிருக்கிறது. இதையெல்லாம் கேள்விப்படும் போது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.
யாரும் யோசிக்க முடியாத அளவுக்கு பெரிய புரட்சி தான் இது. மருந்து வாங்குபவர்கள் கூட அவதிப் பெற்று வருகின்றனர். இது போன்ற சில இக்கட்டன சூழ்நிலைகளை தவிர்த்திருக்கலாம். 20 நாட்டில் உள்ள 20 சதவீத பணக்காரர்களுக்காக 80 சதவீத மக்கள் மீது பாதிப்பை ஏற்படுத்துவது சரியல்ல” என்று நடிகர் விஜய் வேதனையோடு தெரிவித்திருக்கிறார்.