டெல்லிக்கு திடீர் விஜயம்! : தீவிர அரசியலில் இறங்குகிறார் அஞ்சலி!

அரசியலுக்கு, சினிமாவுக்கும் ஒரு பிரிக்க முடியாத உறவு ஆண்டாண்டு காலமாகவே இருந்து வருகிறது.
தன்னிடமிருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கையை வைத்து அதை நம்பி அரசியலுக்குள் நுழைந்து வெற்றி பெற்றவர்களும் இருக்கிறார்கள். அது வெறும் திரையில் நாம் செய்த சாகசங்களுக்கான அபிமானம் மட்டும் தான் என்று தெரியாமல் படு தோல்வியைச் சந்தித்தவர்களும் இருக்கிறார்கள். என்றாலும் இன்றுவரை திரையுலக பிரபலங்கள் மத்தியில் அரசியல் ஆர்வம் என்பது குறைந்தபாடில்லை.
தமிழ்நாட்டில் நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்குள் நுழைவதற்கான அத்தனை வேலைகளிலும் இறங்கி விட்டார் என்று திரைமறைவுத் தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில் பிரபல இளம் நடிகை ஒருவரும் அரசியல் களத்துக்குள் இறங்குகிறார் என்பது தான் ஆந்திர அரசியலில் புயலைக் கிளப்பி விட்டிருக்கும் லேட்டஸ்ட் அப்டேட்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் புகழ்பெற்ற நடிகையாக இருக்கும் அஞ்சலி தான் அந்த இளம் நடிகை.
சமீபத்தில் டெல்லிக்கு திடீர் விசிட் அடித்த நடிகை அஞ்சலி அங்கு சில அரசியல் பெருந்தலைகளையும் நேரில் சந்தித்து மணிக்கணக்கில் பேசியிருக்கிறார். அதோடு பாராளுமன்றத்துக்கு சென்றவர் அங்கிருந்த அத்தனை அறைகளையும் பார்வையிட்டு வந்திருக்கிறார். அஞ்சலியின் இந்த நடவடிக்கைகளைப் பார்த்தே அவர் அரசியலுக்குள் நுழையப் போகிறார் என்று பரப்பை கிளப்பியிருக்கின்றன தெலுங்கு ஊடகங்கள்.
பொதுவாக பெண் வேட்பாளர்களுக்கு ஆந்திராவிலுள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாரதீய ஜனதா கட்சியிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அஞ்சலியும் மேற்படி இந்த இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றில் சேரலாம் என்கிறார்கள். மேலும் கைவசம் தமிழ், மலையாளத்தில் ஒன்றிரெண்டு படங்களை வைத்திருக்கும் அவர் மெல்ல மெல்ல படங்களில் நடிப்பதைக் குறைத்து விட்டு வருகிற 2019ம் ஆண்டு தீவிர அரசியலில் இறங்குவார் என்கிறார்கள்.
ஏற்கனவே தனக்கு அரசியலில் நுழைய ஆர்வம் இருப்பதாக மீடியாக்களில் சொல்லி வந்த அஞ்சலி இதுவரை தனக்கு அப்படி ஒரு ஆசை இல்லவே இல்லை என்று இதுவரை மறுப்பேதும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.