‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் நடித்தது பற்றி நடிகை துஷாரா விஜயன்!

Get real time updates directly on you device, subscribe now.

நடிகை துஷாரா விஜயன் ‘சார்பட்டா பரம்பரை’ மற்றும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ போன்ற படங்களில் தனது திறமையான நடிப்பால் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர்ந்தார். அவரது நடிப்புத் திறமைக்கு அப்பால், அவர் ஏற்று நடித்த அந்த கதாபாத்திரங்களுக்கு ஆன்மாவை கொடுப்பதற்காக மிகுந்த அர்ப்பணிப்பினை கொடுத்தார் துஷாரா. அருள்நிதிக்கு ஜோடியாக அவர் கதாநாயகியாக நடித்துள்ள, வரவிருக்கும் திரைப்படமான ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் தனக்கு மற்றுமொரு நம்பிக்கைக்குரிய ஒன்றாக இருக்கும் என பதிவு செய்துள்ளார். படம் உலகம் முழுவதும் இன்று (மே 26, 2023) திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இந்தப் படத்தில் தனது கதாபாத்திரம் மற்றும் அணியுடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடிகை துஷாரா விஜயன் கூறும்போது, “எனது படங்கள் தேர்வு குறித்து எப்போதுமே நான் கவனமாக இருப்பேன். அதில் என்னுடைய கதாபாத்திரம் எளிதில் என்னுடன் கனெக்ட் ஆக வேண்டும். ‘கழுவேத்தி மூர்க்கன்’ கவிதா என் மனதிற்கு நெருக்கமாக நான் உணர்ந்த அப்படிப்பட்ட ஒரு பாத்திரம். திண்டுக்கல்லில் உள்ள ஒரு வழக்கமான கிராமத்து பெண். நான் அதே பின்னணியில் இருந்து வந்ததால், இந்த கேரக்டரை செய்வது எளிதாக இருந்தது. அவள் அப்பாவித்தனம் கொண்ட ஒரு பெண். இந்தத் திரைப்படத்திற்குப் பிறகும் பார்வையாளர்கள் அவளை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்” என்றார்.

நடிகர் அருள்நிதியுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட அவர், “அருள்நிதி சார் ஒரு அர்ப்பணிப்புள்ள நடிகர் மற்றும் சிறந்த நடிப்பைக் கொடுத்துள்ளார். பொதுவாக, அவரது படங்களில் காதல் காட்சிகள் பெரிதாக இருக்காது. ஆனால், இந்தப் படத்தில் எனக்கும் அருள்நிதி சாருக்கும் இடையிலான சில அழகான காட்சிகளை இயக்குநர் கௌதம ராஜ் சார் கொடுத்துள்ளார்” என்றார்.

அருள்நிதி மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.’கழுவேத்தி மூர்க்கன்’ படத்தை சை கௌதம ராஜ் (ஜோதிகாவின் ‘ராட்சசி’ புகழ்) எழுதி இயக்கியுள்ளார்.

#DusharaVijayan