அரசியல் என்பது சாக்கடையா? : திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜின் ‘நச்’ பதில்

Get real time updates directly on you device, subscribe now.

‘பாக்யா’ வார இதழில் இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜின் கேள்வி – பதில் பகுதி தனிச்சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் அவர் ஒரு குட்டிக்கதை சொல்லி சுவையாக பதிலளிப்பார்.

அப்படிப்பட்டவரிடம் அரசியல் என்பது சாக்கடையா? என்கிற கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு கே.பாக்யராஜ் சொன்ன பதிலை அப்படியே இங்கே தருகிறோம்.

”சவூதி அரேபியா என்ற இஸ்லாமிய நாட்டில் உமர் என்று ஒரு ஜனாதிபதி இருந்தார். அவர் நோய்வாய் பட்டபோது அங்கிருந்த மருத்துவர்கள் சில மருந்துகளை கொடுத்து இதனை தேனில் குழைத்து சாப்பிடுங்கள் என்றார்கள்.

அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டத்திலுள்ள தேனை சேகரித்து வைத்திருந்தார்கள். அந்நாட்டின் அதிபரான உமர் நினைந்திருந்தால் அதை எடுத்து அருந்தியிருக்கலாம் அவர் அப்படி செய்யவில்லை.

மதியம் வேளை தொழுகைக்காக பள்ளி வாசலில் மக்கள் அனைவரும் கூடியிருந்த போது உமர் எழுந்து நின்று மக்களை நோக்கி,
“எனக்கு ஒரு வியாதி இருக்கிறது. அதற்கு மருத்துவர் தேன் கலந்து சாப்பிட சொல்லுகிறார். அரசாங்க பொறுப்பிலுள்ள தோட்டத்திலிருந்து ஒரு கரண்டி தேன் எடுத்து பயன்படுத்திக் கொள்ளவா?” என அனுமதி கேட்கிறார்.

மக்கள் அனைவரும் “இதற்கெல்லாம் போய் அனுமதி கேட்க வேண்டுமா? தராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்!” என்று சொன்னார்கள் அதற்கு உமர், “இல்லை (அரசாங்கத்தின்) மக்களின் சொத்தை மக்களின் அனுமதியில்லாமல் பயன்படுத்த யாருக்கும் அனுமதியில்லை” என்று கூறிவிட்டு, அந்த தேனை சாப்பிட்டு நோயை குணப்படுத்தினார்.

அந்த காலக்கட்டத்தில் நீங்கள் வாழ்ந்திருந்தால் அரசியல் சாக்கடையா? என்ற கேள்வியே உங்கள் மனதில் தோன்றியிருக்காது” என்று கூறியிருந்தார் பாக்யராஜ்.