இராமநாதபுரம் கலெக்டராக நயன்தாரா : படப்பிடிப்பை முடித்தார் கோபி நயினார்

‘கத்தி’ படக்கதை விவாகரத்தில் அடிபட்ட கோபி என்ற பெயரை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸூடன் பலகட்ட போராட்டங்களை நடத்தி எந்த பலனும் கிடைக்காமல் போனவருக்கு தக்க சமயத்தில் கை கொடுத்தவர் தான் நடிகை நயன்தாரா.
ஒரு நல்ல கதை இருந்தா சொல்லுங்க, உங்க டைரக்ஷன்ல நானே நடிக்கிறேன் என்று நயன் சொல்லவும் உச்சி குளிர்ந்து போன கோபி இதோ முழுபடப்பிடிப்பையும் வெற்றிகரமாக நடத்தி விட்டார்.
நயன்தாராவை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா விமர்சகர்களின் அமோக பாராட்டுகளையும் பெற்ற திரைப்படங்களின் வரிசையில் இணைய தயாராக இருக்கின்றது.
‘கே ஜெ ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில் கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து, புதுமுக இயக்குனர் கோபி நாயனார் இயக்கி வரும் இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன், படத்தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா மற்றும் தேசிய விருது பெற்ற கலை இயக்குனர் லால்குடி இளையராஜா என திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் பலர் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.
வலுவான கதை களத்தை கொண்டு உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் ‘காக்கா முட்டை’ சகோதரர்கள் விக்னேஷ் – ரமேஷ், வேலு ராமமூர்த்தி, ஈ ராமதாஸ், சுனு லட்சுமி மற்றும் ராம்ஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து 24 நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, கடலடி தாலூக்கா, ‘அப்பனூர்’ கிராமத்தில் நடைபெற்ற இந்த படப்பிடிப்பில், ஏறக்குறைய நயன்தாராவின் அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. புகழ் பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் சண்டைக்காட்சிகள் அமைக்க நடைபெற்ற இந்த படப்பிடிப்பில், நயன்தாராவோடு ஆயிரத்திற்கும் மேலான சக நடிகர் – நடிகைகள் இணைந்து பணியாற்றினர்.
கிட்டத்தட்ட முழுமையாக நிறைவு பெற்று இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இன்னும் சில கிராபிக்ஸ் வேலைகளும், மெருகேற்றும் பணிகளும் தான் மிச்சம் இருக்கின்றது. நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் இந்த படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.