ஓ.பி.எஸ் VS சசிகலா ஆதரவு யாருக்கு? : மௌனம் கலைத்தார் அஜித்!
வரலாறு காணாத மழை வெள்ளம் சென்னையை சூழ்ந்த போதும் கூட ”வெளியில் தல காட்ட மாட்டேன்” என்கிற கொள்கையோடு வலம் வந்தவர் தான் நடிகர் அஜித்.
அப்படிப்பட்டவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்த போது தன் ‘தலை காட்டா’ கொள்கையை தளர்த்த வேண்டியதாயிற்று. ஜெ’ மீது அதிக பிரியம் கொண்டவர் என்பதால் அந்த சமயத்தில் ‘விவேகம்’ படப்பிடிப்புக்காக பல்கேரியாவில் இருந்தவர் செய்தி கேட்டதும் உடனடியாக விமானத்தில் சென்னை திரும்பினார்.
வந்தவருக்கு ஜெ’ வின் இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கவில்லை. இருந்தாலும் ஜெயலலிதாவின் சமாதிக்கு தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அஜித் எந்தளவுக்கு ஜெயலலிதா மீது பிரியம் வைத்திருந்தாரோ? அதேபோல ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமானவராகவும் இருந்தார். இன்னும் சொல்லப்போனால், அதிமுகவின் அடுத்த வாரிசே அஜித் தான். அவரைத்தான் ஜெயலலிதா அதிமுக தலைவராக முன்னிறுத்தப் போகிறார் என்றெல்லாம் அப்போது ஊடகங்களில் செய்திகள் வைரலாகியது.
அதோடு அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சசிகலா மும்முரம் காட்டி வந்தபோதே, சசிகலாவை அஜித் சந்தித்தார் என்றார்கள். அனால், அப்படி ஒரு சந்திப்பு நிகழவில்லை என்று பின்னர் தெரிய வந்தது.
இப்படி அதிமுக அபிமானியாக அறியப்படும் அஜித் இப்போது ஓ.பி.எஸ் சசிகலா என இரு துருவங்களாக பிரிந்து நிற்கும் அதிமுகவினரில் யார் பக்கம்? என்பது தான் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதோ அந்த எதிர்பார்ப்புக்கு ‘தல’ சாய்த்து விட்டார் அஜித்.
எப்போதுமே நட்பை விட விசுவாசத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாராம் அஜித். அந்த வகையில் ஜெ’ இருந்தவரை, ஏன் இப்போது வரையிலும் கூட அவருக்கு உண்மையான விசுவாசியாகவே இருக்கும் ஓ பன்னீர்செல்வத்துக்குத்தான் அஜித்தின் முழு ஆதரவு என்று கூறுகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.