RATING : 2.3/5
வழக்கமான பேய்ப்பட சீசனுக்கு மத்தியில் ஒரு கொலை அதற்கான பின்னணி என திடுக் திடுக் காட்சிகளோடு படத்தில் நம்மை பயணப்பட வைத்திருக்கிறார் இயக்குநர் ஏ.எம்.ஆர் ரமேஷ்.
மிகப்பெரிய பெண் தொழிலதிபரான மனீஷா கொய்ராலா அவர் வீட்டிலேயே கொலை செய்யப்பட்டு கிடக்க, தகவல் அறிந்து வரும் போலீஸ் அவரது உடலை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக பாதுகாப்புடன் வைத்திருக்கிறது. ஆனால் திடீரென்று அந்த உடல் காணாமல் போய் விட, போலீசுக்கு மனீஷாவின் கணவரான ஷாம் மீது சந்தேகம் எழுகிறது.
சந்தேகம் விசாரணையாக மாற அந்த விசாரணை அதிகாரியாக வருகிறார் அர்ஜீன். படம் முழுக்க சூடு பிடிக்கும் விசாரணையில் மனீஷாவை கொலை செய்தது யார்? அவரது உடல் எங்கே போனது? என்கிற கேள்விகளுக்கு யூகிக்க முடியாத கிளைமாக்ஸோடு படத்தை முடிக்கிறார்கள்.
போலீஸ் அதிகாரி கேரக்டர் என்றாலே அர்ஜூனுக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி. மனுஷன் இப்பவும் அந்த காக்கிச் சட்டையைப் போட்டவுடன் அப்படி ஒரு மிடுக்கோடு ஆச்சரியப்படுத்துகிறார்.
தன்னை விட வயது அதிகமான மனீஷா கொய்ராலாவை திருமணம் செய்து கொள்ளும் ஷாம் அதே வயதுக்குறிய பக்குவத்தில் இன்னொரு நாயகியான அக்ஷா பட்டாவையும் ஒன்சைடாக லவ்வுகிறார்.
இருவரும் சேர்ந்து தான் மனீஷாவை கொன்றிருப்பார்களோ என்று ரசிகர்களே சந்தேகப்படுகிற அளவுக்கு இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் ஷாம்.
மாப்பிள்ளை படத்துக்குப் பிறகு சற்று இடைவெளி விட்டு தமிழில் நடித்திருக்கிறார் மனிஷா கொய்ராலா. அதிலும் படத்தில் இவர் தான் கதையின் நாயகி என்பது கூடுதல் விசேஷம். அவருக்கும் ஷாமுக்குமான வயசு வித்தியாசம் கதைக்கு தேவைப்பட்டாலும் அது கொஞ்சம் ஓவராகத் தான் தெரிகிறது.
க்ரைம் த்ரில்லர் படத்துக்கே உரிய இசைஞானியின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு பலம்.
மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை செட் போட்டு படத்தில் முழுமையாக காட்டியிருக்கும் கலை இயக்குநரின் உழைப்புக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு.
ஒரு கொலைக்கான பின்னணியைத் தேடிப்போகிறார் போலீஸ் அதிகாரியான அர்ஜூன். யாருமே யூகிக்க முடியாத கிளைமாக்ஸோடு ஒரே இரவில் நடந்து முடிகிறது படம்.
ஒரு மெல்லிய கோடு – திகில் கோடு!