வெற்றிமாறனின் மாறாத வெற்றி வரிசையில் மேலும் ஒரு படம் விடுதலை பார்ட்-1
அரசு முதலாளிகளுக்கு துணைபோவதை எதிர்த்து நிற்கும் மக்கள் படையும், அதை ஒடுக்க முனையும் காவல்துறையும் தான் கதையின் மெயின் பாய்ன்ட்.
நிஜமான ஒரு வெள்ளந்தி மனிதனை கண்களில் காட்டியிருக்கிறார் நடிகர் சூரி. அப்பாவி போல அதேநேரம் அறத்தோடு நிற்கும் அவரது கேரக்டர் நச் ரகம். விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் நமக்குள் கடத்தும் உணர்வு மிகவும் காத்திரமானது. இறுதிக்காட்சியில் மூன்று பெண்களிடம் ஒரு வீட்டிற்குள் நின்று அவர் சமாளித்துப் பேசும் ஆறுதல் வசனங்கள் கொண்ட காட்சி ஒன்று போதும் விஜய்சேதுபதியை நாம் கொண்டாட. நாயகி பவானி ஸ்ரீ சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளார். ஆச்சர்ய அதிர்ச்சி நடிகர் சேத்தனின் கேரக்டரும் அவரது நடிப்பும். சிறப்பு சிறப்பு. கெளதம் மெனென் தனது மிடுக்கான நடிப்பால் கவர்கிறார்
இந்தப்படத்திற்கு இளையராஜாவைத் தவிர்த்து யாராலும் இப்படியொரு இசையை வழங்கியிருக்க முடியாது. வழிநெடுக காட்டுமல்லி என்ற பாடலும் பின்னணி இசையும் அசத்தல் ரகம். வேல்ராஜின் கேமரா காடுகளைச் சுற்றி சுழன்று வலம் வந்துள்ளது. அது படத்திற்கும் பலம் சேர்த்துள்ளது
அரசின் உதவியோடு காவல்துறையினர் செய்யும் பயங்கரவாத செயல்களை சமரசமின்றி காட்சிப்படுத்தியுள்ளார் வெற்றிமாறன்.
அரசை எதிர்த்து ஒரு சில மனிதர்களால் ஜெயிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்தாலும், எளிய மனிதர்களின் போராட்டம் வலிமையானது. அது என்றேனும் இலக்கை அடைந்தே தீரும் என்ற நம்பிக்கையைத் தந்த வகையில் வெற்றிமாறன் ஜெயித்துவிட்டார்..
விடுதலை- பெரு மகிழ்ச்சி
4/5