போலீஸ் ஜீப், கையில் பீர் பாட்டில்! – சர்ச்சையை கிளப்பிய விஷால்
‘இரும்புத்திரை’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஷால் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘அயோக்யா’.
தெலுங்கில் ரிலீசான ‘டெம்பர்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்தை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் பி.மது தயாரித்து வருகிறார். வெங்கட் மோகன் இயக்குகிறார்.
விஷாலுக்கு ஜோடியாக தெலுங்கில் அனைவரின் மனதையும் கவர்ந்த ராஷி கன்னா இதில் நடிக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், கே.எஸ் ரவிக்குமார், சச்சு, வம்சி மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
அந்த போஸ்டரில் பக்கத்தில் போலீஸ் ஜீப் இருக்க, கையில் பீர் பாட்டிலை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார் விஷால்.
ஏற்கனவே தமிழ்சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் புகைப்பிடிப்பது போல நடிப்பதற்கு பா.ம.க தலைவர் ராமதாஸ் உட்பட பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். ‘சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விஜய் சுருட்டு பிடிப்பது போல வந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்ததோடு நடிகர் சங்கம் இதுபோன்ற காட்சிகளில் நடிக்கக்கூடாது என்று நடிகர்களை வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால் தற்போது நடிகர் சங்கத்தின் செயலாளரே ஒருபடி முன்னேறிச் சென்று பீர்குடிப்பது போல போஸ் கொடுத்திருப்பதை ராமதாஸ் கடுமையாக கண்டித்திருக்கிறார். நடிகர் சங்கச் செயலாளரே இப்படி ஒரு காட்சியில் நடிப்பது தவறான முன்னுதாரணம், இதை விஷால் கை விட வேண்டும் என்றும் எச்சரித்திருக்கிறார்.
படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பமாகி ஹைதராபாத், விசாகபட்டினம் ஆகிய இடங்களில் நடைபெற்றது. தொடர்ந்து இப்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக தனது தோற்றத்தை கடின முயற்சியால் ஆஜானுபாகுவாக வடிவமைத்திருக்கிறாராம் விஷால்.
2019 ஜனவரி மாதம் இப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.