‘பிருந்தாவனம்’ படப்பிடிப்பை அர்த்தமுள்ளதாக்கிய விவேக்!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “சேதுபதி” படத்தை தயாரித்தவரும், தற்போது ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் உருவாகி இறுதிகட்ட பணிகளை நெருங்கியுள்ள “எனக்கு வாய்த்த அடிமைகள்” திரைப்படத்தை தயாரிப்பவருமான ஷான் சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக ராதாமோகன் இயக்கும் “பிருந்தாவனம்” எனும் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.
அபியும் நானும், மொழி, பயணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ராதாமோகன் இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்.
“பிருந்தாவனம்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் அருள்நிதி கதாநாயகனாகவும், தான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இப்படத்தில் முக்கிய வேடத்தில் விவேக் நடிகர் விவேக்காகவே நடிக்கிறார்.
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் . ஜில் ஜங் ஜக் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையையும், கதிர் கலை இயக்கத்தையும் மேற்கொள்ள, பொன் பார்த்திபன் வசனம் எழுதுகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று கர்நாடகாவில் உள்ள சக்லேஷ்ப்பூரில் இனிதே துவங்கியது. மேலும் படப்பிடிப்பை அர்த்தம்முள்ளதாக்கும் வகையில் நடிகர் விவேக் படப்பிடிப்பு துவங்கும் முன், தனது இருபத்தியேழு இலட்சத்து முப்பத்தெட்டாயிரத்து ஒன்றாவது மரக்கன்றை (27,38,001) இன்று சக்லேஷ்ப்பூரில் நட்டார்.