கிராமத்து காதலின் புனிதத்தைத் சொல்ல வரும் ”சென்னை பக்கத்துல”
T.C.B பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பில் தெய்வானை தயாரிக்கும் படம் ”சென்னை பக்கத்துல”.
எஸ்.சீனு என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் கதாநாயகியாக கமலி அறிமுகமாகிறார். மற்றும் மாணிக்க விநாயகம், அஞ்சலி தேவி, ஓ.ஏ.கே.சுந்தர், வின்சென்ட் ராஜ், வாசுவிக்ரம், கோவை செந்தில், ரஞ்சன், நெல்லை சிவா, விஜய்கணேஷ், கிங்காங் ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் கானா பாலா, காதல் சுகுமார் இருவரும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி படத்தை இயக்குகிறார் வேலன். D.S.W, DFD. படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது…
”இந்த படம் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாகும் ஒரு காதல் காவியம். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தால் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் காதல் மிகவும் கேவலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்படி காதல் அழிந்து கொண்டிருக்கு இந்த நேரத்தில் இன்னும் கிராமப்புறங்களில் புனிதமான காதல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு காதல் கதை தான் இது. இப்படித்தான் காதலிக்க வேண்டும் என்பதை தான் இந்த படத்தில் கூறி இருக்கிறோம். அனைத்து இளைஞர்களுக்கும் இந்த படம் பிடிக்கும்.
தற்போது நாட்டிற்கு மிகவும் தேவையான விவசாயத்தையும் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். விவசாயியாக மாணிக்கவிநாயகம் வாழ்ந்து இருக்கிறார்” என்றார் இயக்குனர் வேலன்.